93 ரூபாய் தாண்டியாச்சு.. 4வது நாளாக அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை.. பட்ஜெட்டில் பேரிடி
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த கையோடு, பெட்ரோல், டீசல் விலை தினம் அதிகரித்து வருகிறது. சத்தமே இல்லாமல், தினம் 20 காசு, 30 காசு என்று விலை அதிகரிக்கிறது.
இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்கும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல் விலை 93 ரூபாயை கிராஸ் செய்துள்ளது.
9 'டூ' 7.. முதல் நாளே அசுர பாய்ச்சல்.. ஸ்டாலின் பதவியேற்பு விழா - தலைமைச் செயலக நிகழ்வுகள்
4வது நாளாக
பெட்ரோல், டீசல் விலை நான்காவது நாளாக இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா ஊரடங்கு ஒருபக்கம், சட்டமன்ற தேர்தல் ஒருபக்கம் என்ற சூழலில், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.
இப்போ தலைகீழ்
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பிருந்து, விலை ஏற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, தேர்தல் நடைபெற்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இதனால், மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், இப்போது எல்லாம் தலைகீழ்.
10 காசுகள் உயர்வு
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.70 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 93.15 ரூபாய்க்கும், டீசல் விலை 30 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
பட்ஜெட்டில் பேரிடி
இந்த விலையேற்றத்தால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்க என்று பெட்ரோல் பங்கில் பலர் சொல்லக் கேட்டிருப்போம். அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோல் 70, 75 ரூபாய் இருந்த காலத்தில், இப்படி ரவுண்டாக 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு, மைலேஜ்ஜை கணக்கு செய்து, கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை நடுத்தர வர்க்கத்தினர் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தனர். இப்போது, ரவுண்டாக 100 ரூபாய் என்றாலும், அது ஒரு லிட்டர் தான் என்பது அவர்கள் பட்ஜெட்டில் விழும் பேரிடியாகும்.