உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை : சென்னை, மும்பையில் ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 முதல் 30 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 24 முதல் 29 பைசா வரையில் உயர்ந்துள்ளது.
டெல்லி: நாட்டின் பல நகரங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 22 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.90.18ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல டீசலின் விலையும் 28 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.83.18 என்ற விலையில் விற்பனையாகிறது.மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94.12 ரூபாயாகவும், டீசல் ஒரு லிட்டர் 84.63 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் - டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்த நிலையில் தற்போது அவை தினசரி என்ற அளவில் நிர்ணயிக்கப்படுகின்றன. இருப்பினும் இவற்றில் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வரத்தான் செய்கிறது.
நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு கடந்த ஜனவரியில் இருந்து மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது.
சென்னையில் பெட்ரோல் டீசல்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 22 காசுகள் உயர்ந்து, 90 ரூபாய் 18 காசுகளாக விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து, 83 ரூபாய் 18 காசுகளாக விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்துள்ளது.
மும்பை, டெல்லி
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 94.12 ரூபாயாகவும், டீசல் ஒரு லிட்டர் 84.63 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 87.30 ரூபாயில் இருந்து 87.60 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் டீசல் விலை 77.48 ரூபாயில் இருந்து 77.73 ரூபாயாக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் 88.92 ரூபாயும், டீசல் 81.31 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
வாகன ஓட்டிகள் அச்சம்
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது. கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் தற்போதைக்கு கலால் வரியை குறைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியத்துறை அமைச்சர் பதில்
ராஜ்யசபாவில் நேற்றைய தினம் கேள்வி நேரத்தில் பெட்ரோல், டீசலின் விலையை குறைக்கும் வகையில், மத்திய அரசு வரியை குறைக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தற்போதைக்கு அப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.
எண்ணெய் நிறுவனங்கள்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாக இருக்கும்போது நாம் விலைகளை அதிகரிக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவாக இருக்கும்போது, இங்கேயும் விலைகளை குறைக்க வேண்டும். இதுதான் சந்தை நடைமுறை. எண்ணெய் நிறுவனங்கள் இதைதான் பின்பற்றுகின்றன. நாங்கள் அவர்களுக்கு சுதந்திரம் அளித்துள்ளோம் என்றார்.
கலால் வரி அவசியம்
வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்கு பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் பெரிதும் நம்பியுள்ளதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
விரைவில் சதமடிக்கும்
இந்தியாவை பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகள் விதித்து வரும் அதிகப்படியான வரிகள் காரணமாகதான் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை, பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 89 காசுகளும் டீசல் 3 ரூபாய் 86 காசுகளும் உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் பெட்ரோல், டீசல் உயர்ந்தால் விரைவில் ஒரு லிட்டர் 100 ரூபாயை எட்டிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.