பெட்ரோல் விலை உயர்வால் புல்லட் பாண்டியின் அவல நிலை.. வைரல் மீம்ஸ்.. புதைந்திருக்கும் உண்மை!
சென்னை: வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள் "பெட்ரோல் விலை உயர்வால் புல்லட் பாண்டி, தனது பைக்கிற்கு பெட்ரோல் போட முடியாமல் சைக்கிளில் செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது" என்ற மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக மக்களின் கஷ்டங்களை அப்படியே சொல்வதைவிட திரைப்பட கதாபாத்திரங்கள் சொல்வது போல் வைத்தாலோ, வடிவேலு பாணி நையாண்டியில் வைத்து சொன்னாலோ அது மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக வடிவேலு பாணியில் சொன்னால் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சாலை பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி உயர்வு போன்ற விஷயங்களில் நையாண்டி செய்வது மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆதங்கம்
பெட்ரோல் டீசல் விலை உயர்வு நாட்டு மக்களை மோசமாக பாதித்து வரும் விஷயம். இதை பற்றி மக்களுக்கு ஆதங்கங்கள் அதிகமாக இருந்தாலும் வேறு வழியில்லையே என்ன செய்வது என்று ஏற்றுக்கொண்டு அந்த விலை உயர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள், புகைப்படங்கள் ரசிக்கும் படியாக இருந்தால் அது பெரிய அளவில் வைரல் ஆகும்.
வைரல் மீம்
அப்படித்தான் "பெட்ரோல் விலை உயர்வால் புல்லட் பாண்டி, தனது பைக்கிற்கு பெட்ரோல் போட முடியாமல் சைக்கிளில் செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது" என்ற மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விலைவாசி உயர்வு
பெட்ரோல் டீசல் விலை உயர்வு வெறும் வாகன போக்குவரத்தின் விலையை மட்டும் தீர்மானிப்பது இல்லை. ஒவ்வொரு பொருளின் விலையையும், அதற்கான வரியையும் தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு ஒரு டிவியை நீங்கள் இதுவரை 20000 கொடுத்து வாங்கினீர்கள் என்றால், அதில் வரி 500 முதல் 1000 இருக்கும் என்று வைத்துக்கொள்ளலாம். அதேநேரம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக வாகன கூலி ஏறினால் அதன் விலை பொதுமக்களின் தலையில் விழும். அந்த டிவியின் விலை 1000 அதிகரிப்பதுடன், 21 ஆயிரம் ரூபாய்க்கு ஜிஎஸ்டியாக இன்னும் சில 100 ரூபாயை சேர்த்து கட்ட வேண்டியதும்
ஜிஎஸ்டி கூடும்
இதேபோல் தான் பைக், கார், ஆப்பிள், காய்கறி என அனைத்து விலையும் உயரும் வரியும் உயரும். பெட்ரோல் டீசல் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பது ஒருபுறம் என்றால் அந்த விலை உயர்வால் வரியும் அரசுக்கு அதிகரிக்கும். பேருந்து கட்டணம் 600 ரூபாய் என்றால் அதற்கு வரி 60 என்று வைத்துக்கொள்வோம். பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பேருந்து கட்டணத்தையும் கூடுதலாக 100ஐ ஏற்றினால், அதற்க வரியும் உயரும். இதனால் இரண்டு சுமை நம் மீது விழும்.இதுதான் காலம் காலமாக இருக்கிறது.
விலை உயராது
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் (பிப்.,1) பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.2.50 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.4 வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்படுவதாக கூறினார். மேலும், இந்த கூடுதல் வரிவிதிப்பு நேற்று முதல் அமலாகும் எனவும் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் மீது வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு கூடுதல் வரி விதிக்கப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக புகார்
எனினும் செஸ் வரி மூலம மக்களிடம் அதிக அளவில் வரி வசூலிக்கப்படுதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன. அரசு பெட்ரோல் - டீசல் விற்பனை மூலமாக மறைமுக வரி என்ற பெயரில் மக்களிடம் இருந்து அரசின் மொத்த வருமானத்தில் ஏறக்குறைய 20% வசூலிப்பதாக திமுக எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். திமுக மட்டுமல்ல எல்லா எதிர்க்கட்சிகளும் கூறிவருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பெட்ரோல் டீசல் மீதான மத்திய கலால் வரி குறைக்கப்பட்டு மேல்வரி(cess) மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் பாதிக்கக்கூடியது என்றும் எனவே, மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் கூறியுள்ளார்