சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.84 டீசல் விலை ரூ.78.86 - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.83.99ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: பெட்ரோல் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து ஒரு லிட்டர் 84 ரூபாயை நெருங்கியுள்ளது. டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் ரூ.78.86 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகின்றன.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது.
அப்போதெல்லாம், இந்தியாவில் விலை குறைப்பின் பலனை மக்களுக்கு கொடுக்காமல், வரியை மத்திய, மாநில அரசுகள் உயர்த்திக் கொண்டன. கொரோனா லாக்டவுன் காலமாக இருந்தாலும் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ்... சென்னையை நோக்கி படையெடுக்கும் வாகனங்களால் கடும் நெரிசல்
40 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் விலை மாற்றமின்றி 83.63ஆக நீடித்தது. டீசல் விலை மட்டும் அவ்வப்போது மாற்றப்பட்டது. மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் விலை தற்போது மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. இந்த வாரத்தில் தொடர்ந்து 3வது நாளாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.83.99ஆக விற்பனை செய்யப்படுகிறது. மூன்று நாள்களாக பெட்ரோல் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் டீசல் விலை தொடர்ந்து 23ஆவது நாளாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.