இந்திய வரலாற்றில் எம்.எல்.ஏக்களை கூண்டோடு தகுதி நீக்கம் செய்த முதல் சபாநாயகர் பி.எச். பாண்டியன்
Recommended Video
சென்னை: இந்திய மாநிலங்களின் சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு தகுதி நீக்கம் செய்தவர் என்ற சரித்திரம் படைத்தவர் மறைந்த தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன்.
தமிழக சட்டசபையின் சபாநாயகராக 1985-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் பி.எச். பாண்டியன். இந்த பதவி காலங்களில் இந்திய அரசியலில் பெரும் விவாதங்களுக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் பி.எச். பாண்டியன்.
1987-ல் விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனை அட்டை பட கார்ட்டூனுக்காக சிறைக்கு அனுப்பினார் பி.எச். பாண்டியன். அப்போதுதான் சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என பிரகடனம் செய்தார் பி.எச்.பாண்டியன்.
ஜெ. மரணத்தில் மர்மம்.. சசிகலாவிடம் விசாரிக்க வேண்டும்.. புயலை கிளப்பிய பி எச் பாண்டியன்
சட்டசபை உயரியது
இதனைத் தொடர்ந்து நீதித்துறை பெரிதா? சட்டசபை பெரிதா? யாருக்கு அதிகாரம் இருக்கிறது? என்கிற விவாதங்கள் நடைபெற்றன. அப்போது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பி.எச் பாண்டியன். ஜனநாயகத்தில் சட்டசபைதான் அதிகாரம் கொண்ட அமைப்பு.
நீதித்துறையின் கடமை
சட்டசபையின் ஒவ்வொரு உறுப்பினரும் மாநில மக்களின் பிரதிநிதிகள். அதாவது நான்கரை கோடி மக்களும் சட்டசபைக்கு வர முடியாது என்பதால் தங்களது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளனர். மக்களின் இதயம்தான் சட்டசபை. நீதித்துறை என்பது சட்டசபையால் நிறைவேற்றப்படும் சட்டங்களை நடைமுறைப்படுத்துகிற அமைப்பு.
முதல் முறையாக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்
அந்த சட்டத்துக்கும் மேலான தீர்ப்பு ஒன்றை நீதித்துறையால் வழங்கிவிட முடியாது என ஆணித்தரமாக குறிப்பிட்டார். அதேபோல் இந்திய அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு தகுதி நீக்கம் செய்த முதலாவது சபாநாயகர் பி.எச். பாண்டியன் என்ற வரலாற்றுக்கும் சொந்தக்காரர் பி.எச். பாண்டியன்.
சம்மனை ஏற்க மறுத்தவர்
1985-ல் அரசியல் சாசன நகலை எரித்ததற்காக திமுக எம்.எல்.ஏக்கள் 10 பேரை கூண்டோடு தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார் சபாநாயகராக இருந்த பி.எச். பாண்டியன். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் தமக்கு உச்சநீதிமன்றம் அனுப்பிய சம்மனை ஏற்க முடியாது என நிராகரித்தார் பாண்டியன். இது தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்திருந்த பாண்டியன், தேசிய கீதம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையே பிரதமர் ஏற்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
தியேட்டர் உரிமங்கள் விவகாரம்
இதேபோல் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை அவதூறாக, இழிவாக சித்தரிக்கும் காட்சிகள் அடங்கிய திரைப்படங்களை வெளியிடும் தியேட்டர்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என அதிரடியாக கோரிக்கையை வைத்தவர். மேலும் பத்திரிகைகள், அரசியல்வாதிகளை விமர்சிப்பதன் மூலம் வியாபாரத்தை நடத்துகின்றன; இந்த பத்திரிகைகள் அரசியல்வாதிகள் மீது தவறு இருந்தால் அவர்களை விமர்சிக்கும் கட்டுரைகளை இலவசமாக வெளியிட முன்வரலாமே என கிடுக்குப்பிடி போட்டவரும் பி.எச். பாண்டியன்தான்.
வரலாறு என்றென்றும் பேசும் பி.எச். பாண்டியன் சகாப்தத்தை!