பிரித்திகா மேனன் சொல்வது சுத்த பொய்.. கோர்ட்டுக்கு போவேன்.. தியாகராஜன்
பிரித்திகா மேனன் மீது வழக்கு தொடர போவதாக தியாகராஜன் கூறியுள்ளார்.
சென்னை: தன் மீது போட்டோகிராபர் பிரித்திகா மேனன் சொன்ன பாலியல் குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய் என்று நடிகர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
'பொன்னர் சங்கர்' படத்தில் போட்டோகிராபராக பணிபுரிந்தபோது, அந்த படத்தின் இயக்குனரும், பிரபல நடிகருமான தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லைகளை தந்தார் என்று இளம்பெண் பிரித்திகா மேனன் மீ டூ வலைப்பக்கத்தில் புகார் அளித்திருந்தார்.
அடுத்த ஐஸ்வர்யா ராய்
இந்த புகாரில் தியாகராஜன் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தையும், பேசிய வார்த்தைகளையும் விரிவாக நீண்ட பக்கங்களாகவே அவர் பதிவிட்டிருந்தார். குறிப்பாக, "உன்னை அடுத்த ஐஸ்வர்யா ராய் போல ஆக்குகிறேன் என்று சொல்லி பலமுறை நடுராத்திரிகளில் என் பெட் ரூம் கதவை தட்டியவர் தியாகராஜன்" என்று பிரித்திகா மேனன் தெரிவித்திருந்தார்.
பிராந்தி தருகிறேன்
மேலும் இளம்பெண்கள் தனக்கு தாய் மசாஜ் செய்த போட்டோக்களை காட்டி, அவர்களிடம் உல்லாசமாக இருந்ததையும் என்னிடம் சொன்னார். அப்போது உடம்பெல்லாம் எனக்கு கூசிபோய் விட்டது. தனக்கு ஒருநாள் உடம்பு சரியில்லாமல் போனபோது, என் ரூமுக்கு வா, பிராந்தி தருகிறேன் என்று சொல்லி பலமுறை என்னை வற்புறுத்தியவர்தான் தியாகராஜன் என்று பிரித்திகா மேனன் வலைபக்கத்தில் குற்றச்சாட்டுகளை பதிவிட்டிருந்தார்.
அவதூறு வழக்கு
ஆனால் பிரித்திகாவின் இந்த குற்றச்சாட்டுக்கு தியாகராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "போட்டோகிராபர் பிரித்திகாவின் இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பதிவிடப்பட்டுள்ளது. பிரித்திகா மேனன் மீது அவதூறு வழக்கு தொடரப் போகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஆதாரங்கள் இல்லை
பாலியல் குற்றச்சாட்டை கூறிவரும் நடிகைகள் ஒருவரும் இதுவரை எந்த விதமான ஆதாரத்தையும் தரவில்லை, ஆனால் புகாருக்கு உள்ளான வைரமுத்து, தியாகராஜன் உள்ளிட்டோர் கோர்ட்டுக்கு போவதாக சொல்லி இருக்கிறார்கள். தன் மீது குற்றம் சாட்டிய லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் மட்டும் கோர்ட்டுக்கே போய்விட்டார்.
பரபரப்பாகிவிட்டது
வைரமுத்து தொடங்கி ஏராளமானோர் மீ டூ என்ற வலைதளத்தில் சிக்கி பரபரப்பாகி வருகிறார்கள். இப்படி நாள்தோறும் ஒவ்வொரு பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு கொண்டிருப்பதால் தமிழ்திரையுலகமே பரபரப்பாகி உள்ளது.