திருவள்ளுவருக்கு "குடுமி.." ஆரிய வித்தைகளை காட்டினால் தமிழகம் ஏற்காது.. ஸ்டாலின் ஆவேசம்
சென்னை: ஹிந்தி பாடப் புத்தகம் ஒன்றில், திருவள்ளுவர் படத்தில் குடுமி வைக்கப்பட்டுள்ளது, திருநீறு பூசப்பட்டுள்ளது என்று கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் திருவள்ளுவர் சாப்பிடும்போது அவர் மனைவி வாசுகி பரிமாறும் காட்சி உள்ளது. திருவள்ளுவர் தலையில் குடுமி உள்ளது. விபூதி பூசப்பட்டுள்ளது. பார்க்க புரோகிதர் போல திருவள்ளுவர் காட்சியளிக்கிறார். சிபிஎஸ்இ 8ம் வகுப்பு பாடப் புத்தகம் இது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: CBSE 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்!
பா.ஜ.க. அரசு அனுமதிக்கிறது; அ.தி.மு.க. அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க. பொறுக்காது. எச்சரிக்கை! இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.