வாங்கியதே 10 ஓட்டுக்கள்தான்.. அப்படியும் பஞ்சாயத்து தலைவியான ராஜேஸ்வரி.. பிச்சிவிளை சுவாரசியம்
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 27ம் தேதி நடைபெற்றது.
அன்று, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உடன்குடி அருகே உள்ள பிச்சிவிளை கிராம ஊராட்சியில் பெருவாரியான கிராம மக்கள் வாக்களிப்பதை தவிர்த்தனர். இங்கு மொத்தம் ஆறு வார்டுகள் உள்ளன. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 785.
ஊராட்சி தலைவர் பதவி சுழற்சி முறையில் இந்த முறை தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த ஊராட்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 6 ஓட்டுகள் மட்டுமே இருக்கின்றன. எனவே ஊராட்சியில் சிறுபான்மையினராக உள்ள தலித் தலைவரா? என்ற பிரச்சாரம் பிற மக்களிடையே எழுந்தது.
ஏற்கனவே, இப்பகுதியிலுள்ள பிற ஜாதியினருக்கும், அருகேயுள்ள ஊர்களை சேர்ந்த தலித் சமூகத்தினருக்கும் அவ்வப்போது உரசல்களும் இருந்து வந்த நிலையில், இந்த பிரச்சினை இன்னும் பூதாகரமாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஊராட்சியில் உள்ள ஆறு வருடங்களுக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டு தங்கள் ஊர்களில் கருப்புக் கொடிகளை கட்டினர்.
27ம் தேதி பிச்சிவிளை ஊராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தலித் சமூகத்தை சேர்ந்த ஆறு வாக்காளர்களும், பிற சமூகத்தை சேர்ந்த 7 பேரும் என மொத்தமே 13 பேர்தான் ஓட்டுப் போட்டனர்.
இரவோடு இரவாக தேர்தல் ஆணையம் விரைந்த ஸ்டாலின்.. குவியும் நிர்வாகிகள்.. தர்ணா நடத்த திட்டமா? பரபரப்பு
தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரி மற்றும் சுந்தராச்சி என்ற இரு தலித் பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களையும் சேர்த்து இத்தனை ஓட்டுக்கள்தான் போடப்பட்டன.
இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ராஜேஸ்வரிக்கு 10 ஓட்டுக்களும், சுந்தராச்சிக்கு 2 ஓட்டுக்களும் கிடைத்தன. ஒரு ஓட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. எனவே வெறும் 10 ஓட்டுகள்தான் பெற்றபோதிலும், ராஜேஸ்வரி பஞ்சாயத்து தலைவராகியுள்ளார். 6 வார்டுகளுக்குமே, யாரும் போட்டியிடவில்லை. எனவே, உறுப்பினர் என்று யாருமே இல்லை என்பதால், அதற்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.