பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு நடத்தியது கூட்டணிக்காக அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி கூட்டணி அமைப்பதில் பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில், நேற்று முன்தினம் சென்னை வந்த பாஜக தமிழக பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ்கோயல், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை, தொகுதிகள் என்னென்ன என்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் கூறின.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் அமைச்சர் தங்கமணி சந்தித்தார், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சந்திக்கவில்லை என்றார். மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் திமுக, அமமுக தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, பாஜக - அதிமுக இடையே எத்தனை சீட் என்று முடிவு எடுக்கப்பட்டு விட்டது என்றும், யாருக்கு எந்தெந்த தொகுதி என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்படும் நிலையில், கூட்டணி குறித்து மிக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து தலைவர்களை சந்தித்து பேச தமிழகம் வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.