"திமுக என்ன சங்கரமடமா".. அன்று சொன்னார் கருணாநிதி.. இன்று கையில் எடுக்கும் பிகே.. உதயநிதிக்கு ஜெர்க்
உதயநிதியின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் பிகே காய் நகர்த்தி வருகிறாராம்
சென்னை: "திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை" என்று கருணாநிதி சொன்னதைதான் கிட்டத்தட்ட பிகேவும் தற்போது கையில் எடுத்துள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. காரணம், ஸ்டிரைட்டாகவே கட்சி தலைவரிடம் பேசி, உதயநிதிக்கு ஒரு ஜெர்க் தந்துள்ளதாக செய்தி கசிந்து வருகின்றது!
திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை என்று ஒருகாலத்தில் சொன்னவர் மறைந்த கலைஞர் கருணாநிதி... அரசியல் கட்சிகளில் வாரிசுகள் பதவிக்கு வருவதை விமர்சித்து கருணாநிதி அவ்வாறு கருத்து கூறியிருந்தார்.
ஆனால் நிலைமையும், நாட்டு நடப்பும் அப்படி இல்லை.. நேருவுக்கு பின் இந்திரா, இந்திராவுக்குபின் ராஜீவ், ராஜீவுக்குப் பின் சோனியா, சோனியாவுக்குபின் ராகுல் என்றாகிவிட்டது.. அதுபோலவே, கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி என்று பதவிகளை பிடித்து வருகின்றனர்.
விமர்சனம்
இப்படி கேட்ட, அதே கருணாநிதிதான், "எனக்கு பின் வழிநடத்தப் போகிற தம்பி ஸ்டாலின் அவர்களே" என்று மக்கள் முன்னிலையில் வார்த்தைகளை உதிர்த்தார். ஆரம்பத்தில் அவ்வளவாக விமர்சிக்கப்படாத நிலையில், தற்போது உதயநிதி வருகை திமுகவுக்கு வந்தபிறகு அதிகமாகவே வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
பாஜக
அதேபோல, சமீப காலமாக, அதிமுகவும் இந்த வாரிசு அரசியலில் சளைத்தவர்கள் இல்லை என்பதை மறுக்க முடியாது. ஆனால், திமுகவின் வாரிசு அரசியலை மையப்படுத்தி விமர்சித்து வருகிறது பாஜக! இப்படிப்பட்ட சூழலில், திமுகவே தற்போது இந்த விவகாரத்துக்கு கடிவாளம் போட்டு வருவதே இப்போதைய செய்தி.. அதாவது உதயநிதியின் அதிரடிகளுக்கு பிகே டீம் செக் வைத்து வருவதாக சொல்லப்படுகிறது..
சீனியர்கள்
காரணம், உதயநிதியின் பொறுப்பு, பதவி, தரப்பட்டும் முக்கியத்துவம் எல்லாமே கட்சியின் சீனியர்களுக்கு அதிருப்தியை தந்து வந்தது.. அதுமட்டுமல்லாமல், யாரையுமே கலந்தாலோசிக்காமல் உதயநிதி, மீடியாக்களுக்கு பேட்டிகளை தந்துவிடுவதாவும் சொல்லப்பட்டு வருகிறது.. உதயநிதியின் முக்கியத்துவத்தால்தான், கு.க.செல்வம் போன்ற நிர்வாகிகள் கட்சி மாறுவதற்கு காரணம் என்ற ஒரு கருத்தும் உள்ளது.
பிரசாந்த் கிஷோர்
அதனால் கட்சியின் நிர்வாகிகள் தலைமையிடம் ஒரு விஷயத்தை சொல்வதைவிட, ஸ்டிரைட்டாக பிகேவிடமே ஓபனாக பேசிவிடுகிறார்களாம்.. இதுபோன்ற சூழலில், இன்னொரு தகவலும் பிகே டீம் காதுக்கு சென்றுள்ளது.. உதயநிதிக்கு முக்கியத்துவம் தருவதற்காக அவருக்காக அச்சடித்து ஒட்டப்படும் போஸ்டர்களில்கூட தீவிர கவனம் செலுத்தப்படுகிறதாம்.
முயற்சிகள்
எப்படியாவது தலைமையிடம் நல்ல பெயரை வாங்கிவிட வேண்டும் என்பதற்காகவே இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்து வருகிறது..ஆனால், சோஷியல் மீடியாவில் இது பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பிவிட்டுவிட்டது... இதைதான் பிகே டீம் ஸ்டாலினிடம் பேசியிருப்பதாக தெரிகிறது. கட்சியின் இமேஜ் இதன்மூலம் குறைய வாய்ப்புள்ளது என்ற முறையில் பிகே இந்த விஷயத்தை அணுகவும், அதை பொறுமையாக கேட்டுக் கொண்டாராம் ஸ்டாலின்.
பேனர்கள்
அதனால்தான் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சிகளில்கூட உதயநிதியின் படங்கள் பேனர்களில் இடம்பெறவில்லை என்று சொல்கிறார்கள். கட்சியின் இமேஜ்-க்காக இவை செய்யப்பட்டாலும், இதனால் உதயநிதி ஆதரவாளர்கள் கொஞ்சம் அப்செட்தானாம்.. ஏற்கனவே திமுகவுக்காக பிகே டீம் தனியாக செயல்பட்டு கொண்டிருக்கும்போது, உதயநிதி தனக்கான ஒரு டீமை தயார் செய்து, அதன்படி காய் நகர்த்தி வருகிறார்.. தற்போது பிகே நேரடியாகவே ஸ்டாலினிடம் உதயநிதிக்கு செக் வைத்துள்ளது சலசலப்பை திமுகவுக்குள் ஏற்படுத்தி உள்ளதாம்!