டிராபிக்கால் திக்கு முக்காடும் தி.நகர்.. இனி கவலை வேண்டாம்! இணைக்கப்படும் மேம்பாலம்.. செம பிளான்
சென்னை: சென்னையில் எப்போதும் திருவிழா கூட்டம் போல காணப்படும் தி.நகரில் போக்குவரத்து நெரிசலைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. அந்த அளவுக்கு மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் தி நகரில் இருக்கும். இந்நிலையில், தி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வாகன நெருக்கடி அதிகரித்துவிட்டது.
அதிலும் பீக் ஹவர்களில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் சாரை சாரையாக வருவதை பார்க்க முடியும். இதனால் மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று விட்டாலே பெரிய சாதனை என்று சொல்லும் அளவுக்குதான் சென்னையில் சாலை போக்குவரத்து நிலைமை உள்ளது.
சென்னை ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு..ஊறுகாய், ஜாம்-க்கு தடை..பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் என்ன?
சென்னையில் போக்குவரத்து நெரிசல்
காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் திண்டாடும் நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்கள் பெருகிவிட்டன. இதனால், சென்னையின் பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தி நகரில் புதிய மேம்பாலம்
அதன்படி, சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட அரசின் பல்வேறு அமைப்புகள் மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொள்ள உள்ளன. குறிப்பாக சென்னையில் எப்போதும் திருவிழா கூட்டம் போல காணப்படும் சென்னை தி. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய மேம்பாலத்தை கட்டும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
ரூ.131 கோடி செலவில்
தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. தற்போது உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலம் 747 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இந்த மேம்பாலத்தின் சாய்தளத்தை தகர்த்து புதிதாக அமைய இருக்கும் மேம்பாலத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மிக நீளமான மேம்பாலங்களில் ஒன்றாக
தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை, மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு மற்றும் தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை உள்ளிட்ட 3 சந்திப்புகளை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைகிறது. 1200 மீட்டர் நீளத்தில் 8. 40 மீட்டர் அகலத்தில் ரூ. 131 கோடியில் இந்த மேம்பாலம் அமைகிறது. இதற்கான வரைபடம் தயார் செய்யும் பணியும் முடிந்துள்ளது. இந்த வரைபடத்தை சென்னை ஐஐடி ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. பழைய மேம்பாலத்துடன் புதிய மேம்பாலம் இணைக்கப்பட்டால் சென்னையில் உள்ள மிக நீளமான மேம்பாலங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அதோடு போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.