சொந்தங்களை ரயில் ஏற்றிவிட போகிறவரா நீங்கள்? பிளாட்பார்ம் பக்கம் போனா கட்டணம் ஷாக் அடிக்கும்!
சென்னை: தெற்கு ரயில்வே நிர்வாகம் பிளாட்பார்ம் டிக்கெட் விலையை இரு மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது. சென்னை உட்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை தற்போதைய ரூ10-ல் இருந்து ரூ20 ஆக உயர்த்தி உள்ளது தெற்கு ரயில்வே.
ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் கொரோனா காலத்தில் மிக கடுமையாக உயர்த்தப்பட்டன. இதன்பின்னர் ஒரு பிளாட்பார்ம் டிக்கெட் ரூ10 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஏற்கனவே பொதுமக்களுக்கு சுமையாகத்தான் இருந்து வருகிறது.
தற்போது பண்டிகை காலங்கள் என்பதால் ரயில் நிலையங்களில் இயல்பாகவே கூட்டம் அலைமோதும். இந்நிலையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளது தெற்கு ரயில்வே.
இந்த 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ10-ல் இருந்து ரூ20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிளாட்பார்ம் டிக்கெட்கள் வழங்குவதை நிறுத்திய தெற்கு ரயில்வே! அக்னிபாத் போராட்டங்களால் நடவடிக்கை
இக்கட்டண உயர்வானது அக்டோபர் 1-ந் தேதி முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கத்தான் இந்த பிளாட்பார்ம் டிக்கெட் உயர்வு என கூறினாலும் பொதுமக்களுக்கு இதுமிகப் பெரும் சுமையாகவே இருக்கிறது என்பதுதான் ஆதங்கம்.
இதேபோல் நாட்டின் பல ரயில்வே மண்டலங்கள் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வை அறிவித்துள்ளன. விஜயவாடா கோட்டத்தில் ஒரு பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.