EXCLUSIVE: இளையராஜா - எஸ்.பி.பி.. இவங்களுக்குள்ள என்னதான் பிரச்சனை.. மனம் திறக்கிறார் மனோ
இளையராஜா-எஸ்பிபி நடுவே ஏற்பட்ட மனக்கசப்பு பற்றி விளக்குகிறார் மனோ
Recommended Video
சென்னை: "யார்மேல நமக்கு ரொம்ப பாசம் இருக்குமோ, அங்கதான் நமக்கு கோவமும் இருக்கும் இல்லையா.. அதுபோல இதுவும் ஒரு செல்லக்கோபம்! ஒருத்தருக்கொருத்தர் மனசுக்குள்ள நிறைஞ்சி இருக்காங்க" என்று எஸ்பிபி-இளையராஜாவின் நட்பு பற்றி புளகாங்கிதத்துடன் சொல்கிறார் பாடகர் மனோ!
"எஸ்பி பாலசுப்பிரமணியமும், இளைஞானி இளையராஜாவுக்கும் லடாய்' என்று ஊடகங்களில் செய்த வந்தவுடன் யாருமே நம்பவில்லைதான். மீண்டும் இணைவார்களா என்று ரசிக பெருமக்கள் ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இவர்கள் கட்டிபிடித்து இருக்கும் போட்டோ வெளிவந்தது.. இதை பார்த்ததும்தான் எல்லோருக்கு நிம்மதியானது.
இவர்கள், இருவரும் பிரிந்ததற்கும், சேர்ந்ததற்கும் வர்த்தக ரீதியான காரணமே சொல்லப்பட்டது. எனினும், இவர்களுடன் நெருக்கமும் பாசமும், மரியாதையும் வைத்துள்ள பிரபல பாடகரும், நடிகருமான மனோவிடம் இது பற்றிய காரணம் கேட்கலாம் என்று தோன்றியது. ஒன் இந்தியா தமிழுக்காக மனோவிடம் பேசியபோது:
என்ன பிரச்சனை?
கேள்வி: இந்த விவகாரம் பத்தி ஆரம்பத்தில் ஒரு பேட்டியில் நீங்க சொன்னீங்க, "இவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் நடக்கிறது புருஷன்-பொண்டாட்டிக்குள்ள நடக்கிற பிரச்சனை மாதிரி.. இதெல்லாம் ஒரு ஊடல்தான்.. சீக்கிரமா சேர்ந்துடுவாங்க"ன்னு சொன்னீங்க. அதன்படியே நடந்தும் போச்சு. உண்மையிலேயே ரெண்டு பேருக்கும் என்னதான் சார் பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? ஏன் சேர்ந்தார்கள்? விளக்க முடியுமா?
பாடகர்
"இந்த இசை துறையில் ஒரு அற்புதமான நட்பு கொண்டவர்கள் யார் என்றால் இவங்க ரெண்டு பேரும்தான். ஆரம்ப காலத்தில் இருந்து, அதாவது பாவலர் பிரதர்ஸ் சென்னைக்கு வேலைதேடி காலத்தில் இருந்து நண்பர்கள். அண்ணன் எஸ்பிபி அப்பவே பாடகரா ஆயிட்டாரு.
செல்ல கோபம்
அண்ணன் ஜிகே வெங்கடேஷிடம் உதவியாளராக இளையராஜா அவர்களும் பணியாற்றியபோதிருந்தே நண்பர்கள். ரெண்டு பேருமே கஷ்டப்பட்டேதான் வளர்ந்தார்கள். இவங்களுக்குள்ள நட்பு இல்லைன்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லை. ஒருத்தருக்கொருத்தர் மனசுக்குள்ள நிறைஞ்சி இருக்காங்க. யார்மேல ரொம்ப பாசம் இருக்குமோ, அங்க கொஞ்சம் கோவமும் இருக்கும். இது ஒரு செல்லக்கோபம்தான்.
தேதி வாங்கிட்டார்
இளையராஜா வெளியில வந்து புரோக்ராம் பண்ண ஆரம்பிச்சதே 2012-க்கு மேலேதான். 40 வருஷமா அவர் சரியா வெளியே வரல. தன் குழுவோடு புரோக்ராம் நடத்தலாம்னு அவர்ருக்கு எண்ணம் வந்ததே 2011-க்கு அப்பறம்தான். இத்தனைக்கும் அவருக்கு பிடிச்ச பாடகர் அண்ணன் எஸ்பிபிதான். அவர்கிட்ட தேதி வாங்கிட்டுதான் மத்ததை கன்பார்ம் பண்ணுவார்.
ஒப்புக் கொண்டார்
இந்த சமயத்துலதான் எஸ்பிபி அண்ணனின் 50-ம் ஆண்டு கொண்டாட்டம் வந்தது. இதுக்கு எஸ்பிபி சரண் அவர்கள், "இந்த வருஷம் வேர்ல்ட் டூர் நான் செய்யறேன்னு" அவங்க அப்பா கிட்ட கேட்டார். தொடர்ந்து அது சம்பந்தமான வேலைகளிலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். ஆனால் இப்படி ஒரு விஷயம் சம்பந்தமாக, இளையராஜா சாரிடம் அறிவிக்கவில்லை. அது ஒன்னுதான் சின்ன மிஸ்டேக் ஆகிப்போச்சு. அந்த சமயத்துல இளையராஜா சார் அமெரிக்காவில் எஸ்பிபி அண்ணனுடன் ஒரு நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டார்.
விசா பிரச்சனை
இதற்கு காரணம், நாம் கூப்பிட்டால் எப்படியும் அவர் வந்துவிடுவார் என்பதால்தான். இந்த சமயத்தில்தான் ஒரே நேரத்தில் விசா பிரச்சனை வந்தது. அப்போது இளையராஜா சாரின் விசா ஓகே ஆகிறது.. எஸ்பிபி சாருக்கு இரண்டு விசா தரப்பட முடியாது என்று சொல்லி நிகழ்ச்சியை தள்ளி போடும்படி கேட்டார்கள். இதுலதான் பிரச்சனை வந்தது. நேரா வந்தும் பேசவில்லை.. கூப்பிட்டும் வராததால் கொஞ்சம் மனசு வருத்தமாக இருந்தார். அவ்வளவுதான்.. ஆனால் விஷயம் வெளியில வேற வேற மாதிரி வந்தது.
ஃபேஸ்புக்
அப்போதுதான் இளையராஜா சார் சொன்னார், "என்னையே வேணாம்னு என் நண்பன் சொன்னான்.. அப்பறம் எதுக்கு என் பாட்டை பாடணும்?னு கேட்டார். அதுகூட போன்ல ஒரு மெசேஜ் அனுப்பினார். "என் பாட்டை நீ பாடறதா இருந்தால், என்கிட்ட பர்மிஷன் வாங்கிக்கோ"ன்னு சொன்னார். இதுல கோபம் தெரியுதா? செல்லம் தெரியுதான்னு நீங்களே பாருங்க. இளையராஜா சொன்ன விஷயம், பாலு சார் சம்பந்தப்பட்டவங்க ஃபேஸ்புக்ல வெச்சிட்டாங்க. இதுக்கு அப்பறம்தான் பயங்கர பரபரப்பாயிடுச்சு.
கற்பனையே
ஒரு போன்ல சேர்ந்திருக்க வேண்டிய ஆளுங்க, இந்த மெசேஜ், மீடியாக்களால கொஞ்சம் தூரமாயிட்டாங்க. அப்பறம் எல்லாரும் போய் பேசினோம். ஆனா அவரை வந்து மீட் பண்றதுக்கு இத்தனை நாள் ஆயிடுச்சு. அவ்வளவுதான். இதுல அசம்பாவித வார்த்தைகளை விடுவது, வேற வேற விஷயம் பேசறது.. இப்படி எதுவுமே நடக்கல. மீடியாவில் ஒவ்வொருத்தரோட கற்பனையில் போட்ட விஷயம்.
மாற்றம் இல்லை
இப்போகூட இசைஞானி இளையராஜா, இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய கலைஞர்களுக்கு ஒரு கட்டிடம் கட்ட உள்ளதால், அதற்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எஸ்பிபி சார்கிட்டயும் ஜேசுதாஸ் சார் கிட்டயும் சொன்னார். ரெண்டு பேரும் 'நோ' சொல்லவே இல்லையே.. வந்துட்டாங்க ஜுன் 2-ம் தேதி! 9-ம் தேதி நிகழ்ச்சி நடந்தது. இப்போ கோர்ட் கூட சொல்லி இருக்கு ராயல்ட்டி சம்பந்தமாக.. இதைதான் இளையராஜா சார் அப்போதிருந்து சொல்லி வருகிறார். இவர்களின் நட்பில் எந்த மாற்றமும் இல்லை" என்று உறுதியாக சொல்லி முடித்தார்.