பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்.. திரை உலகினர் அதிர்ச்சி
சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலன் இன்றி இன்று மதியம் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து மீண்டும் வர வேண்டும் தமிழகமே பிரார்த்தனை செய்து வந்தது. ஆனால் அவர் இந்த மண்ணை விட்டு சென்றுவிட்டார். சற்றுமுன்னதாக அவரது உயிர் பிரிந்தது.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா காரணமாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
16 மொழிகள்.. 40 ஆயிரம் பாடல்கள்.. ஏராளமான விருதுகள்.. பாடும் நிலா பாலு கடந்து வந்த பாட்டுப் பாதை!
சுயநினைவு வந்தது
எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை அவ்வப்போது முன்னேறி வந்தது. அதே சமயம் திடீர் திடீர் என்று அவரின் உடல்நிலை நலிவடைந்தது. உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறி வந்தது. இதனால் தொடர்ந்து ஐசியூவில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார். சென்ற வாரம் அவரின் உடல்நிலை சீராகி வந்தது. தொடர்ந்த அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கடந்த நில நாட்களுக்கு முன்பு சுய நினைவும் வந்தது.
மருத்துவமனை அறிக்கை
இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியானது. அதில், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர் குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் எஸ்.பி.பியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாரதிராஜா வேதனை
இதையடுத்து திரையுரலகினர் மட்டும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் திரும்பி வர வேண்டும் என்று பிராத்தனை செய்ய தொடங்கினர். நேற்று மாலை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்த்தார். அப்போது அவர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தார். இன்று பாரதிராஜாவும் சென்று பார்த்தார். அவர் தனது நண்பரின் நிலை கண்டு கடும் வேதனையை வெளிப்படுத்தினார்.
எஸ்பிபி மரணம்
இதனிடையே எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை மோசமடைந்த நிலையில் எம்.ஜி.எம். மருத்துவமனையில் பிற்பகல் ஒரு மணி அளவில் அவரது உயிர்பிரிந்தது. எஸ்பிபி உயிரிழந்ததை அவரது மகன் எஸ்பிபி சரண் அறிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே எஸ்.பி.பாலசுப்பிமணியத்தின் உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கொரோனா நெகட்டிவ் என மருத்துவமனை சான்றிதழ் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். சென்னை காம்தாநகர் இல்லத்தில் மாலை 4 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.பி.பி. உடல் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடைய செப்டம்பர் 4ம் தேதி முதலே எஸ்பிபிக்கு கொரோனா இல்லை என்றும் மாரடைப்பால் காலமானார் என்றும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.