ஹேப்பியா.. ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதி உதவி.. தமிழக அரசு உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!
சென்னை: தமிழகத்தில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதி உதவி வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில், வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு, தலா ரூ.2000 ஒரே தவணையாக தரப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக, சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள், மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
ஏழை குடும்பங்கள் கணக்கெடுப்பு தவறாக உள்ளது. 18 லட்சம் குடும்பங்கள்தான் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளது. ஆனால் 60 லட்சம் பேருக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தலுக்கான உத்தரவாகும் என்று, சட்டப் பஞ்சாயத்து சார்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 2006ம் ஆண்டு முதல் ஏழை குடும்பங்களுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த கணக்கெடுப்பு படிதான் அரசு இந்த முடிவுக்கு வந்தது. இவ்வாறு கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
மேலும், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு, போதிய வருமானம் இல்லாமல் உள்ள தொழிலாளர்கள் பட்டியலை, தொழிலாளர் நலச் சங்கங்கள் வழங்கின. அதன் அடிப்படையில்தான் அரசு இந்த முடிவை எடுத்தது. தவறானவர்களுக்கு இந்த தொகை போய்விடக்கூடாது என்பதற்காக, ஆன்லைன் மூலமாக நிதி வழங்குகிறோம். ஆதார் அட்டையை ஆதாரமாக எடுத்துக்கொள்கிறோம் என்று விளக்கம் அளித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மனுவை தள்ளுபடி செய்தது. ஏற்கனவே தமிழக அரசு ரூ.1200 கோடியை இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்துவிட்டது. எனவே விரைவில் மக்களுக்கு இந்த பணம் வந்து சேரும்.