பட்டியலின மக்கள் அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை.. பட்டியலின ஆணையத்தை கலைக்க மனு
சென்னை: பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல், பாஜக நிர்வாகி அளித்த புகாரில் விரைந்து செயல்படும் தேசிய பட்டியலின ஆணையத்தை கலைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பட்டியலின மக்களையும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அதில் பாதிப்பு ஏற்படும் போது அவற்றை கண்காணித்து நடைமுறைப்படுத்தும் வகையில் தேசிய பட்டியலின ஆணையம் உருவாக்கப்பட்டது.
ஆனால் மதுரை கீழ உரப்பனூர் கிராமத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு சாதிய பிரச்சனையால் பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட சம்பவம், பட்டியலின மக்கள் அதிகாரத்திற்கு வருவதை தடுக்க மேலவளவில் பட்டியலினத்தவர் கொலை, பட்டியலின மக்கள் மீது பரமகுடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம், கோவை மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பட்டியலின மக்கள் பலியானது உள்ளிட்ட பல விவகாரங்களில் தேசிய பட்டியலின ஆணையம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் முடங்கி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக பட்டியலினத்தை சேராதவரும், பாஜக-வை சேர்ந்தவர் புகார் அளித்தால்,உடனடியாக ஆணையம் செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் அதன் தலைவர் செல்வகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில் பஞ்சமி நிலங்கள் தொடர்பான பல்வேறு புகார்கள் பட்டியலின ஆணையத்தில் தற்போதும் நிலுவையில் உள்ள போது, முரசொலி நிலம் தொடர்பான புகார் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக முழுக்கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
பட்டியலினத்தவர் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அம்பேத்கரின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட தேசிய பட்டியலின ஆணையம் அந்த நோக்கத்திற்கு மாறாக அரசியல் ஆதாயம் அடையும் நோக்கத்தில் ஆணையம் செயல்படுவதால் அதை கலைக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த பொது நல மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.