10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்.. பள்ளிகள் திறப்பு எப்போது.. செங்கோட்டையன்
சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. லாக்டவுன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் தொடங்கி உள்ளது.
சென்னையில் திருத்தும் மையங்கள் இல்லாத நிலை மற்றும் லாக்டவுன் காரணமாக பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி; மையங்களின் எண்ணிக்கை 67-ல் இருந்து 202-ஆக அதிகரிக்கப்பட்டது. மொத்தம், 44 ஆயிரம் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை நடைபெறும் என்றும் பொதுத்தேர்வின் போது ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் கடந்த மே 19ம் தேதி அளித்த பேட்டியில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இந்தியா முன்னுதாரணமாக மாறப்போகிறது.. நாட்டு மக்களுக்கு மோடி அதிரடி கடிதம்.. தொழிலாளர் பற்றி உருக்கம்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்றும், பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.