தமிழகத்தில் மே 3ல் நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31க்கு மாற்றம்
மே 2ஆம் தேதி பொதுத்தேர்வு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 31ஆம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் தேர்வு மே 31ஆம் தேதி நடைபெறும் என தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிற தேர்வுகள் அனைத்தும் குறிப்பிட்ட அட்டவணையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் 9 ,10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் 11ஆம் வகுப்பு எஞ்சியிருந்த பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. ஜனவரி மாதம் முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. பிப்ரவரி மாதத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் அவர்களுக்கு திறனறிவு தேர்வை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தமிழகத்தில் 6,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 46,308 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
Recommended Video
பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் மே 3ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. செய்முறை தேர்வுகள் 16ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மே 2ஆம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பிளஸ் 2 தேர்வு தேதியை மாற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் மே 3ஆம் தேதி நடைபெற இருந்த பொதுத்தேர்வு மே 31ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் அனைத்தும் முன்னர் அறிவித்த தேதிகளிலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அம்மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.