பிளஸ் 2 ரிசல்ட்..பெயிலானாலும் கவலை வேண்டாம் ஜூன் 19ல் துணை தேர்வு எழுதலாம்
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு எழுதிய 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 93.76% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 94.03% பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக அமைச்சர் கூறினார்.

இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் 2ஆம் இடம், பெரம்பலூர் மாவட்டம் 3ஆம் இடம் பிடித்தது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.99% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் சுயநிதி பள்ளிகளில் 99.08% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரு பாலர் பள்ளிகளில் 94.39% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளும் மதிப்பெண்களும் மட்டுமே உங்களுக்கு கடைசியில்லை. பெற்றோர்களும் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். தோல்வியடைந்த மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இந்த தேர்வுகளை எழுதி உடனடியாக தேர்ச்சி பெற்று நடப்பாண்டே உயர் கல்விகளில் மாணவர்கள் சேரலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications