3 கூட்டங்கள்... தனி மனிதத் தாக்குதலில் குதித்த மோடி.. உடனுக்குடன் தலைவர்கள் கொடுத்த பதிலடி
Recommended Video
சென்னை: தென்னிந்தியாவில் நேற்று ஒரே நாளில் பிரதமர் மோடி அதிரடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 3 கூட்டங்களில் பேசினார். மூன்றிலும் அவர் தனி மனித தாக்குதலில் ஈடுபட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பாஜகவுக்கு நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் செல்வாக்கு கணிசமாக குறைந்து கொண்டே வரும் இந்த சூழலில் மீண்டும் எப்படியாவது பாஜக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று எண்ணும் மோடி நேற்று ஒரே நாளில் தென்னிந்தியாவில் உள்ள ஆந்திரா, தமிழகம், கர்நாடகம் என்று மூன்று மாநிலங்களில் அதிரடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மூன்று இடங்களிலும் அவரது பேச்சில் தனி மனித தாக்குதல்களே அதிகம் இருந்ததை காண முடிந்தது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியவர் அங்கு ஆந்திர மாநில முதல்வரும் தனது முன்னாள் நண்பருமான சந்திரபாபு நாயுடுவை பற்றி அதிகம் குறித்தே பேசினார். பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு குறித்து பேசியவர் அவரை ஃபாதர் ஆஃப் லோகேஷ் என்று குறிப்பிட்டார். தனக்கு சீனியர் என்று கூறிக்கொள்ளும் சந்திரபாபு முதுகில் குத்துவதில் அனைவருக்கும் சீனியர் என்றும் தன்னுடைய சொந்த மாமனாரின் முதுகில் குத்தியே அவர் ஆட்சியை பிடித்தார் என்றும் கூறினார்.
குண்டூர் பொதுக்கூட்டத்தை முடித்தவர் அங்கிருந்து நேராக தமிழகம் வந்தார். திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் அரசு விழாவில் சில நலத்திட்டங்களை தொடங்கி வைத்தவர் பின்னர் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திலும் காங்கிரஸ் குறித்து கடுமையாக விமர்சித்தவர் பின்னர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்து கடுமையாக சாடினார்.
ப.சிதம்பரத்தின் பெயரை குறிப்பிடாமல் அவரை ரீ கவுண்டிங் மினிஸ்டர் என்றும் இங்கு ஒருவர் தன்னை மட்டுமே அறிவாளி என்று எண்ணிக்கொண்டிருக்கிறார். ஐஸ்கிரீம், சிம்கார்டு ஆகியவற்றுக்கு 'பேமிலி பேக்கேஜ்' முறை இருப்பதைப்போல் இப்போது சில தலைவர்கள் 'பேமிலி பேக்கேஜ்' முறையில் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் ஜாமின் பெறுவதற்காக நீதிமன்ற படிகளை ஏறிக்கொண்டிருக்கின்றனர். என்றும் ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு பேசினார்.
பின்னர் இங்கிருந்து கர்நாடகா சென்றவர் அங்கு ஹூப்ளியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தவர் பின்னர் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். அங்கு பேசியவர் ஆளும்கட்சி எம் எல் ஏக்கள் அனைவரும் தங்களது பவரை காட்டுவதற்காக ஹோட்டல்களில் தங்கி போராடி வருகின்றனர் என்றவர் பின்னர் அம்மாநில முதல்வர் குமாரசாமியை வம்புக்கு இழுத்தார். தனது முதல்வர் பதவியை காத்துக் கொள்வதிலேயே குமாரசாமி தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருவதாக குறிப்பிட்டவர் அவர் யார் அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் பஞ்சிங் பேக் ஆக மாறிக்கொண்டு இருக்கிறார் என்றார்.
இப்படியாக மூன்று இடங்களில் பேசிய பிரதமர் மூன்று இடங்களிலும் தனி மனித தாக்குதலையே பிரதானப் படுத்தியிருந்தார். இப்படி அவர் பேசியதற்கு யார் யாரை குறிப்பிட்டு பேசினாரோ அவர்கள் உடனடியாக பிரதமருக்கு பதில் கொடுத்துள்ளனர். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தை பற்றி பிரதமர் பேசியதற்கு அவரும் பிரதமரின் குடும்பத்தை குறிப்பிட்டே பதில் கொடுத்துள்ளார்.
பிரதமருக்கு பதிலளித்த அவர் மோடி நீங்கள் உங்கள் மனைவியைப் பிரிந்து வாழ்கிறீர்கள். குடும்ப அமைப்பின் மீது உங்களுக்கு ஏதும் மரியாதை இருக்கிறதா? என்று கேள்வி விடுத்தார். "நான் குடும்ப அமைப்பை மதிக்கிறேன்." நீங்கள் என்னைப் பற்றி குடும்ப ரீதியாகப் பேசியதால் நானும் அவ்வாறே பேச வேண்டியதாகிறது" என்று அதிரடியாக பிரதமருக்கு சந்திரபாபு நாயுடு பதிலளித்துள்ளார்.
திருப்பூரில் ப.சிதம்பரத்தை குறித்து பேசியதற்கு சிதம்பரமும் பிரதமர் பேசிய சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் திருக்குறள் மூலமாகவே பதிலளித்துள்ளார். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற குறளை பதிவிட்டுள்ள அவர் இன்றைய ஆட்சியாளர்கள் குறித்தே அன்றே திருவள்ளுவர் கூறியதாக கூறியுள்ளார்.
நேற்றைய பயணத்தின் இறுதியாக கர்நாடகாவில் பேசியதற்கு அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி நேற்று பிரதமரின் செயல் அற்பத்தனமாக இருந்தது என்று குறிப்பிட்டவர் ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு நிலம் வழங்குவதோடு 50% நிதியும் வழங்குகிறது. அந்த ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கும்போது அந்த மாநில முதல்வரை அழைக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச நன்றி உணர்வு கூட அவர்களுக்கு இல்லை என்று சாடினார்.
இப்படியாக தான் பேசிய இடங்களில் எல்லாம் தனி மனித தாக்குதலில் ஈடுபட்ட பிரதமருக்கு சம்பந்தப் பட்டவர்கள் உடனடியாக பதிலும் கொடுத்துள்ளார்கள். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ.. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.