நெருங்கும் புரேவி புயல்.. தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்.. எடப்பாடியாருக்கு போனில் சொன்ன மோடி
சென்னை: புரேவி புயல் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது அந்தவகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் மிதமாக பெய்து வந்த மழை தற்போது கனமழையாக பெய்து வருகின்றது இதன் காரணமாக மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
கரையை கடக்கும் போது, 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. சமயங்களில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதீத கன மழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமியை தொலைபேசியில் அழைத்து ஆலோசித்துள்ளார். தமிழக மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி அளித்து இருப்பதாகவும் மோடி டுவிட்டரில் கூறியுள்ளார்.
இதேபோல கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் தொலைபேசியில் பேசியுள்ளார் மோடி. நிவர் புயலின்போது, எடப்பாடி பழனிச்சாமி மற்றும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம் மோடி போனில் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, திருகோணமலை மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் காலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடல் பகுதிகளில் கடுமையான காற்று வீசுவதோடு கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்படுகிறது.
புரேவி புயலின் வேகம் குறைவு.. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்வு.. இரவு இலங்கையை கடக்கும்!
புயல் சூழலால் கிழக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி நிலையங்களும், இன்று முதல் 4ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரக் கூடிய மழையால் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் இலங்கையின் வடக்கு வடமத்திய வடமேல் மாகாணங்களில் கன மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.