அட.. ஜெ. பிறந்த நாள் அன்று இப்படியா?.. அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் திறப்பு!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடியின் படம் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது.
பொதுவாக அதிமுகவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை, ஜெயலலிதா மட்டுமே கட்சியில் முன்னிறுத்தப்பட்டார். கட்சியின் ஒரே தலைமையாக அவர் நீடித்து வந்தார். அதேபோல் அதிமுக அலுவலகத்திலும் ஜெயலலிதா படமும், எம்ஜிஆர் படமும் மட்டுமே இருக்கும்.
இந்த நிலையில்தான் தற்போது சென்னை அதிமுக அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் திறக்கப்பட்டு இருக்கிறது. ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் மோடியின் படம் வைக்கப்பட்டு இருக்கிறது. இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியாக பிறந்தநாள் அன்று இந்த புகைப்படம் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் கருப்பு மற்றும் வெள்ளையில் இருக்கிறது. சுவற்றின் ஓரத்தில் இன்று காலைதான் இந்த புகைப்படம் மாட்டப்பட்டு பின் திறக்கப்பட்டது.
ஜெயலலிதாவும், மோடியும் இருக்கும் அந்த படத்தில் மோடிக்கு ஜெயலலிதா மனு ஒன்றை அளிக்கிறார். ஆளுயர படம் அலுவலக நுழைவாயிலின் ஒருபுறம் வைக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு அதிமுக - பாஜக கூட்டணி வைத்துள்ளதை அடுத்து மோடி படம் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படம், நரசிம்ம ராவ், வாஜ்பாய் ஆகியோரின் படங்கள் இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக மோடியின் படம் அந்த அலுவலகத்தில் இடம்பெற்று இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் ஒருவரின் புகைப்படம் இந்த அலுவலகத்தில் திறக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.