"கடிதங்கள் போதாது முதல்வரே.. இதுவரை ஏதாவது பதில் வந்திருக்கா.. தமிழகத்துக்கு அவமானம்".. மதுரை எம்பி
பிரதமருக்கு கடிதங்கள் மட்டும் போதாது முதல்வரே என்று மதுரை எம்பி தெரிவித்துள்ளார்
சென்னை: "கடிதம் போதாது முதல்வரே.. இதுவரை நீங்கள் எழுதிய கடிதங்கள் எத்தனை? வந்த பதில்கள் எத்தனை? ஓர் முதல்வரின் கடிதத்திற்கு மறு மொழி கூறாமல் இருப்பது தமிழக மக்களுக்கு அவமானம்.... பதிலே இல்லாத கடிதங்களால் பயன் என்ன" என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதங்கள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார் மதுரை எம்பி சு.வெங்கடேசன்.
Recommended Video
விவசாயிகள், நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்துக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு 2 தினங்களுக்கு முன் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பானது, தமிழக விவசாயிகளையும் நெசவாளர்களையும் கடும் கோபத்துக்கும், அதிருப்திக்கும் ஆளாக்கி வருகிறது.. இதை எந்த தரப்புமே விரும்பவில்லை.
நாளிதழ்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
தமிழக முதல்வர்
இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பை தெரிவித்தார்.. மேலும், "விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட்டு விட வேண்டும்... மாநில அரசு கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்... தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்" என்று பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வலியுறுத்தினார்.
சு.வெங்கடேசன்
தற்போது இந்த கடிதத்தை சுட்டிக்காட்டி மதுரை எம்பி சு.வெங்கடேசன் , "கடிதம் போதாது முதல்வரே...பதிலே இல்லாத கடிதங்களால் பயன் என்ன" என்றும் கேட்டுள்ளார்.. இதை பற்றி தன்னுடைய பேஸ்புக் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
உள் உற்பத்தி
"மாநில அரசுகளின் கடன் வாங்குவதற்கான வரம்பை மாநில உள் உற்பத்தி மதிப்பில் 3 % லிருந்து 5 % ஆக உயர்த்தியுள்ள மத்திய அரசு அதற்கு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு எதிராக கடிதம் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் கடிதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை நிறுத்துமாறு நிபந்தனை போடுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதாக கூறியிருக்கிறீர்கள்.
கூட்டாட்சி முறைமை
இப்படி நிபந்தனை போடுவது கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்ள தேவையான அத்தியாவசிய செலவுகளுக்கு நிதி கிடைப்பதை தடுத்து விடும் என்றும், இது பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறைமைக்கு உகந்ததல்ல என்றும், அரசியல் சட்டப்பிரிவு 293 (3) ஐ மத்திய அரசு நிபந்தனைகள் போட பயன்படுத்துவது இதுவரை இல்லாத ஒன்று எனவும், கருத்தொற்றுமை ஏற்படாத கொள்கை முடிவுகளை நிபந்தனையாக போடக் கூடாது எனவும் உங்கள் கடிதம் கூறுகிறது.
பதில்கள் எத்தனை?
ஒரு பிரதமருக்கு மாநில முதல்வர் கடிதம் எழுதுவதில் தவறில்லை. ஆனால் மாநில முதல்வரின் கடிதத்திற்கு பதில் எழுதுகிற ஜனநாயக மாண்பு கொஞ்சமாவது மத்தியில் உள்ளவர்களுக்கு உண்டா? இதுவரை நீங்கள் எழுதிய கடிதங்கள் எத்தனை? வந்த பதில்கள் எத்தனை? ஓர் முதல்வரின் கடிதத்திற்கு மறு மொழி கூறாமல் இருப்பது தமிழக மக்களுக்கு அவமானம்.
எதிர்க்கட்சிகளை அழையுங்கள்
முதல்வரே...கடிதம் போதாது... அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எதிர்க் கட்சிகளை அழையுங்கள், இணையுங்கள். மற்ற மாநில அரசுகள் கருத்துக்களை இணைத்து கூட்டாட்சிக்கு விரோதம் என்ற குரலை வலுவாக எழுப்புங்கள். தமிழக எம்.பிக்கள் உறுதியாக தமிழக நலனுக்காக நிற்பார்கள். குரல் கொடுப்பார்கள்... கடிதம் கண்டனமாக மாறாமல் பதில் வராது முதல்வரே" என்று தெரிவித்துள்ளார்.
கமெண்ட்கள்
எம்பி வெங்கடேசனின் இந்த கடிதத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.. உண்மை.. தகவல்தொழில் நுட்ப காலத்தில் கடித வரத்து தேவையற்றது என்றும், விவசாயத்திற்கு மட்டுமல்ல.. நாட்டு மக்கள் அனைவருக்குமே இலவச அல்லது மலிவுவிலை மின்சாரம் வழங்கக்கூடிய வகையில் மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்று உள்ளது நம்நாடு.. சூரிய ஒளி மின்சக்தி காற்றாலை என அழிவில்லாத இயற்கை வளங்களை தம்வசம் உள்ளது.. இதை தனியாருக்கு தாரை வார்த்து அவர்கள் கொள்ளை லாபம் அடிக்க வழி வகை செய்கிறார்கள் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.