'தமிழ்நாடு நாள்' கொண்டாட்டத்துக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காத பிரதமர் மோடி
சென்னை: தமிழ்நாடு தனி மாநிலம் உருவானதை முன்னிட்டு தமிழ்நாடு நாள் கொண்டாப்படும் நிலையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உதயமான நாளை முன்னிட்டு அந்தந்த மாநில மொழிகளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1956-ம் ஆண்டு நவம்பர் 1-ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின. மெட்ராஸ் பிரெசிடென்சியில் இருந்து பல பகுதிகள் புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால் பிரிக்கப்பட்டன.
எஞ்சிய தமிழ் மொழி பேசும் பகுதிகள் மெட்ராஸ் ஸ்டேட் என தனி மாநிலமானது. பின்னர் 1967-ல் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தனி மாநிலம் உருவான நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனிடையே பிரதமர் மோடி இன்று காலை 7 மணி முதல் 7.15 மணிவரை அடுத்தடுத்து ட்வீட்டுகளை பதிவிட்டார். கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்கள் உருவான நாளை முன்னிட்டு கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் மத்திய பிரதேச மாநில மக்களுக்கும் இந்தி, ஆங்கிலத்தில் மோடி வாழ்த்துகளை பதிவு செய்தார்.
ஆனால் தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை.