லடாக் எல்லையில் மோடி சுட்டிக்காட்டிய 'மறமானம் மாண்ட- குறளுக்கு அறிஞர்கள் தரும் பொருள் இதுதான்!
சென்னை: சீனா ஆக்கிரமிக்க முயன்ற லடாக் எல்லையில் பிரதமர் மோடி ராணுவ வீரர்களை சந்தித்தார். எல்லை நிலவரங்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடையே பேசுகிறபோது அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசினார்.
Recommended Video
பிரதமர் மோடி மேற்கோள் காட்டிய திருக்குறள்
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு (குறள் எண்: 766)
பொருட்பால்- அதிகாரம் படைமாட்சி
திருக்குறளை ஆங்கிலத்தில் கி.பி.1897-ல் மொழிபெயர்த்த யோகி சுத்தானந்த பாரதி (YOGI SHUDDHANANDA BARATHI) இப்படி குறிப்பிடுகிறார்
Manly army has merits four:-
Stately-march, faith, honour, valour.
இந்த குறளுக்கு தமிழறிஞர்கள் எழுதிய உரை விவரம்:
பரிமேலழகர் உரை: மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே- தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம் - படைக்கு அரணாவது.
மணக்குடவர் உரை: மறமும், மானமும், நல்லவழிச்சேறலும், தெளிவுடைமையுமென இந்நான்குமே படைக்கு அரணாம். நல்வழிச் சேறலாவது மறஞ்செய்யுங் காலத்துக் கலக்க மின்மை.
மு.வரதராசனார் உரை: வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய இந்த நான்கு பண்புகளும் படைக்கு சிறந்தவையாகும்.
கலைஞர் கருணாநிதி உரை: வீரம், மான உணர்வு, முன்னோர் சென்ற வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகிய நான்கும் படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும்.
சாலமன் பாப்பையா உரை: வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசி்ன் நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும்.
சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: வீரம், மானம், மாட்சிமை மிக்க நடைத்திறன், குறிக்கோளில் தெளிவு என்பன நான்கும் படைக்குப் பாதுகாப்பாய் அமையும்.
தமிழக அரசின் தமிழ் இணையவழிக் கல்வியின் பாடப் புத்தகத்தில்...
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே-தறுகண்மை, தன்மானம், பண்டை வயவர் (வீரர்) ஒழுகிய நல்வழியில் ஒழுகுதல், அரசனால் நம்பப்படுதல் ஆகிய நான்கே; படைக்கு ஏமம்-படைக்கு அரணான பண்புகளாம்.
புல்லாங்குழல் ஊதினாலும் சுதர்சன சக்கரமும் எங்கள் கையில் இருக்கிறது - மோடி #ModiStrongestPmEver
தறுகண்மையாவது சாவிற்கும் கொடிய நோவிற்கும் சிறிதும் அஞ்சாமை. மறம் முதலிய நான்கினாலும், முறையே பகைவரைத் தப்பாது வெல்லுதலும். தமக்கும் தம் அரசனுக்குந் தாழ்வு வராமற் காத்தலும், தோற்றோடுவார் மீது படைக்கலந் தொடுதலும் பெண்டிர் கற்பழித்தலும் அரசனது ஏவலின்றிக் கொள்ளையடித்தலும் செய்யாமையும், அறை போகாமையும் பெறப்பட்டன. அரண்போற் பாதுகாப்புச் செய்யும் பண்புகளை அரணென்றார்.
இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.