நிர்மலா சீதாராமனை ஆளை காணோம்.. ஸ்டிரைட்டா மேட்டருக்கு வந்த சு.சாமி..தன்னை நிதியமைச்சராக்க சொல்கிறார்
நிதியமைச்சர் பதவி ஒதுக்க வேண்டும்.. பிரதமருக்கு சு.சாமி கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: மறைமுகமாகவே சொல்லி வந்த நிலையில், இப்போது ஸ்ட்ரைட்டாக மேட்டருக்கு வந்து விட்டார் சுப்பிரமணிய சாமி.. பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் புரியவில்லை என்பதால், தன்னையே நிதியமைச்சராக்க வேண்டும் என்றும் பகிரங்கமாகவே கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சு.சாமிக்கிட்ட இருந்து எந்த ட்வீட் வந்தாலும், முதலில் அடிவயிற்றில் அள்ளு கிளம்புவது பாஜகவுக்குதான். காரணம் எப்பவுமே சேம் சைட் கோல் போட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து பாஜகவில் நீடித்தும் வருகிறார்.
இதற்கு காரணம், காங்கிரஸ் தலைவர்கள் பலரை கேஸ் போட்டு சிக்கலில் மாட்டி வைத்தவர், மாட்டி வைப்பவர். இது பாஜக தலைமைக்கு பெரிய பிளஸ்ஸாக இருப்பதால்தான் சாமியை கண்டு கொள்ளாமல் உள்ளது பாஜக.
மோடி அரசு
இருந்தாலும், 2வது முறை ஆட்சி அமையும்போது ஏதாவது பெரிய பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று சு.சாமி எதிர்பார்த்து காத்திருந்தார். அதிலும் நிதியமைச்சர் பதவி மீது இவருக்கு ஒரு கண் இருக்கத்தான் செய்தது.. ஆனால், மோடி அரசு கடைசிவரை பதவி தரவே இல்லை. இப்படி பதவி தராதது குறித்தும் ட்விட்டரில் எதிர்கருத்துதான் சொல்லிபடியே இருந்தார்.
சு.சாமி
நிதியமைச்சர் பதவியில் நிர்மலாவை நியமித்ததாலோ, என்னவோ, அவரது அறிவிப்புகளை அடிக்கடி விமர்சித்தும் வருகிறார் சு.சாமி. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒருசில சலுகைகளுடன் கூடிய அறிவிப்பு மற்றும் 10 வங்கிகளை இணைப்பதற்கான அறிவிப்பு போன்ற அதிரடிகளை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்திருந்தார். இதைகூட சாமி நக்கல் அடித்து ட்வீட் போட்டிருந்தார்.
புத்திசாலித்தனம்
"புதிய பொருளாதார கொள்கை எதுவுமே வராத நிலையில், 5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு விடை கொடுக்க தயாராக இருங்கள். ஒன்று துணிவு இருக்க வேண்டும், அல்லது புத்திசாலித்தனம் இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே பொருளாதாரத்தை சரிவில் இருந்து மீட்க முடியும். ஆனால் நம்மிடம் இரண்டுமே இல்லை" என்று தாக்கினார்.
பைத்தியக்காரர்
இப்படித்தான் முன்னாள் ரிசர்வ் பேங்க் ஆளுநர் ரகுராம் ராஜனையும் "அமெரிக்காவிலிருந்து வந்த பைத்தியக்காரர்" என்று சீண்டினார். இப்போது திரும்பவும் நிதியமைச்சரை விமர்சித்துள்ளார். நேற்று சென்னையில் 8வது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் திங்க்எடு மாநாடு நடைபெற்றது... இதில் கலந்து கொண்டு பேசியபோது நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஜேஎன்யூ
"பொருளாதாரம் என்பது ஒரு பெரிய விஷயம். ஒரு துறை பலனடைந்தால் இன்னொரு துறை பாதிக்கப்படும். அதை சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். ஜேஎன்யூவுக்கு போய் படித்துப் பட்டம் வாங்கி விட்டால் எல்லாவற்றையும் கற்று விட்டதாக அர்த்தம் கிடையாது" என்று தாக்கி பேசினார்.
நிதியமைச்சர்
"நமக்கு இதுவரை ஒரு நல்ல நிதியமைச்சர் கூட கிடைத்ததில்லை" என்றும் குறிப்பிட்டுள்ள சுப்பிரமணியசாமி, "திரு.மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை. எனவே என்னை வேண்டுமானால் முயற்சித்துப் பார்க்கட்டும்" என்றும் தெரிவித்துள்ளார். அதாவது, மோடிக்குப் பொருளாதாரம் புரியவில்லை என்பதால், தன்னையே பிரதமர் மோடி, நிதியமைச்சராக்க வேண்டும் என்றும் பகிரங்கமாகவே வெளிப்படுத்தி உள்ளார்.
சலசலப்புகள்
இதற்கிடையே நிர்மலா சீதாராமன் கடந்த 2 வாரமாக எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.. எந்த பாஜக தலைவர்களையும் சந்திக்கவில்லை. மேலும் பிரதமர் தலைமையில் நடந்த பொருளாதார ஆலோசகர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. ஏற்கனவே பாஜக தரப்பில் நிர்மலா சீதாராமன் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. இந்திய பொருளாதாரம் நலிய காரணமே நிர்மலாவின் தவறான முடிவுகள்தான் என்றும் ஆட்சிக்கு இதனால்தான் கெட்டப்பெயர் என்றும் சலசலப்புகள் எழ ஆரம்பித்து வருகின்றன... இந்த நிலையில் சாமி வேறு எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றி வருகிறார்.