ரூ31,400 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா- பிரதமர் மோடி சென்னைக்கு வருகை.. மாபெரும் வரவேற்பு
சென்னை: ரூ31,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகைபுரிந்துள்ளார். பிரதமர் மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று மாலை வருகைதந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். ஐஎன்எஸ் அடையாற்றில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
பின்னர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மொத்தம் ரூ31,400 கோடி மதிப்பீட்டிலான 11 திட்டங்களை இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
பிரதமர் மோடியின் தமிழக நிகழ்ச்சி நிரல் இதுதான்.. முழு விவரம்..

மதுரை- தேனி ரயில்
75 கி.மீ தொலைவுள்ள ரூ. 500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட மதுரை-தேனி இடையேயான (அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம்) ரயில் தடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைப்பார். இந்தத் திட்டம் இந்தப் பகுதிகளில் உள்ள சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த வழிவகுக்கும். இதேபோன்று சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 30 கி.மீ தொலைவுக்கு ரூ. 590 கோடி மதிப்பில் 3-வது ரயில்பாதையை நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இதன் மூலம் புறநகர் ரயில் சேவை அதிகரித்து, பயணிகளின் தேவை பூர்த்தி செய்யப்படும்.

எரிவாயு திட்டங்கள்
சுமார் ரூ. 850 கோடி மற்றும் 910 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள 115 கிமீ நீளமுள்ள எண்ணூர்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் 271 கிமீ நீளமுள்ள திருவள்ளூர்-பெங்களூரு பிரிவான இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள நுகர்வோருக்கும், தொழிற்சாலைகளுக்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தை எளிதாக்கும்.

சென்னை-பெங்களூரு சாலை
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் வீடுகட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ரூ. 116 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகள் இந்த நிகழ்ச்சியில் துவக்கிவைக்கப்படுகின்றன. ரூ.28,500 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள 6 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதில் 262 கிலோமீட்டர் தூர பெங்களூரு சென்னை விரைவுச்சாலை ரூ. 14,870 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ளது. கர்நாடகா-ஆந்திரா-தமிழ்நாடு வழியாகச் செல்லும் இந்தச்சாலை பெங்களூருக்கும், சென்னைக்கும் இடையிலான பயண நேரத்தை 2 முதல் 3 மணி நேரம் குறைக்கும். சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் (என்எச்-4), 21 கி.மீ. தூர ஈரடுக்கு, நான்குவழி உயர்மட்டச்சாலை, ரூ.5850 கோடி செலவில் கட்டப்படும். இது சென்னைத் துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் 24 மணி நேரமும் சென்றுவர உதவும். நெரலூரு-தர்மபுரி பிரிவில் (என்எச்-844) 94 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம் பிரிவில் (என்எச்-227) 31 கி.மீ. இருவழிச்சாலை ஆகியவை முறையே ரூ.3870 கோடி மற்றும் ரூ.720 கோடியில் அமைக்கப்படவுள்ளது. இது அந்தந்தப் பகுதிகளில் தடையற்ற போக்குவரத்திற்கு பெரிதும் உதவும்.

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்படும். இந்தத் திட்டம் ரூ. 1800 கோடி செலவில் முடிக்கப்படும். இந்த ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் மூலம் பயணிகளுக்கான வசதி மேம்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. ரூ.1400 கோடி மதிப்பில் சென்னையில் உருவாக்கப்படவுள்ள பன் மாதிரி போக்குவரத்துப் பூங்காவுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இது தடையற்ற சரக்குப்போக்குவரத்துக்கு வழிவகுப்பதுடன், மற்றும் பல்வேறு செயல்பாடுகளுக்கும் உதவும். பிரதமர் மோடி சென்னை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று இரவு டெல்லி திரும்புகிறார். முன்னதாக பிரதமர் மோடியிடம் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுக்க உள்ளார்.