மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி?.. இந்த முறை எது டிரெண்ட் ஆக போகுதோ??
பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருவதாக கூறப்படுகிறது.
சென்னை: திரும்பவும் "கோ பேக் மோடி" என்ற சத்தம் கேட்க போகிறதா என தெரியவில்லை!! ஏனென்றால் அடுத்த மாதம் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரப்போவதாக கூறப்படுகிறது.
5 மாநில தேர்தலுக்கு பிறகு பாஜகவில் நிறைய மாறுதல்கள் தெரிய ஆரம்பித்துள்ளது. எங்கெல்லாம் பாஜக சரிந்து கிடக்கிறதோ, அங்கெல்லாம் மோடி செல்ல திட்டமிட்டுள்ளார் போலும்.
சோனியாகாந்தி ஆஸ்தான தொகுதியான ரேபரேலிக்கு சென்று வந்தார். இப்போது தமிழகத்துக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தேசிய கட்சிகள்
நாடாளுமன்ற தேர்தல் என்னமோ அடுத்த வருஷம்தான் நடைபெற போகிறது. ஆனால் இதற்கான முன்னேற்பாடுகளுக்கு தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் தீவிரமாக இறங்கினாலும், மற்றொரு புறம் மாநில, தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.
ஜனவரி முதல்
குறிப்பாக தோல்விகளை சந்தித்த பாஜக, வரப்போகும் தேர்தலை முன்னிறுத்தி பிரசாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த திட்டமிட்டுள்ளன. இதில் பிரச்சாரங்களின் எண்ணிக்கை மட்டும் நூறு என கூறப்படுகிறது. இந்த பிரச்சாரத்தையும் ஜனவரி முதல் வாரமே ஆரம்பிக்க போகிறாராம்
ஜனவரி 27
அந்த வகையில், 6-ம் தேதி கேரளா செல்ல போவதாக அறிவிப்பு வெளியானது. ஜனவரி 27-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் 3 பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எப்படியும் சென்னை, கோவை அல்லது வேலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
கோ பேக் மோடி
ஏற்கனவே 4 வருட காலங்களாகவே மத்திய அரசு மீது தமிழக மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அதனால்தான் அவர் சமீபத்தில் ராணுவ நிகழ்ச்சிக்கு வந்தபோது கூட "கோ பேக் மோடி" (GO BACK MODI) பிரபலமானது. ஆனால் கஜா புயல் பாதிக்கப்பட்ட பிறகு இந்த அதிருப்தி கோபமாக வெளிப்பட்டது.
மீம்ஸ்கள்
தமிழக தலைவர்கள் கண்டனங்களை அறிக்கைகள் வாயிலாக விடுத்தார்கள். பிரியங்கா சோப்ரா கல்யாணத்துக்கு போனதையடுத்து, மோடியை வைத்து தமிழக மக்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டு கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.
கண்துடைப்பு
இந்த நிலையில் திடீரென தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கியும் அதனை மனசார தமிழக மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. 4 வருடங்கள் இல்லாமல் ஆட்சிக்கு 4 மாதமே உள்ள நிலையில் இதற்கான ஒப்புதலை அளித்துள்ளதை கண்துடைப்பு என்றே முடிவெடுத்து விட்டார்கள்.
பெரும் எதிர்பார்ப்பு
இது எல்லாவற்றையும்விட இங்கிருக்கும் மாநில பாஜக தலைவர்களான எச்.ராஜா உள்ளிட்டோர் மீது மக்கள் கடுப்பில் உள்ளனர். அதனால் வரப்போகும் மோடிக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு இருக்கும் என்பது இப்போதே யூகிக்க முடிகிறது. எனவே மோடியின் தமிழகம் வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமையும்.