சென்னை டு போர்ட் பிளேர்... கடலுக்கு அடியில்... ஹைஸ்பீட் கேபிள்..துவக்குகிறார் பிரதமர்!!
சென்னை: சென்னையில் இருந்து போர்ட் பிளேர் மற்றும் 7 தீவுகளை இணைக்கும் 2, 300 கி.மீ நீளத்திற்கு கடலுக்கடியில் ஹைஸ்பீட் பிராட்பேண்ட் கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. இதை வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இது இந்திய தொழில்நுட்பத்துறையின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த கேபிள் போர்ட் பிளேரில் இருந்து ஸ்வராஜ் துவீப், லிட்டில் அந்தமான், கார் நிகோபார், கிரேட் நிகோபார், லாங் ஐலேண்ட், ரங்கட் ஆகிய இடங்களை இணைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற இடங்களில் இருப்பதைப் போன்றே இங்கும் அதிவேக நெட்வொர்க் சேவை வழங்குவதற்கு என்று இந்த கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை 2018ஆம் ஆண்டில் பிரதமர் மோடி நாட்டினார்.
இந்த கேபிள் மூலம் சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு வினாடிக்கு 2 x 200 கிகாபைட்ஸ் பேண்ட்வித் நெட்வொர்க் சேவை அளிக்கப்படும். போர்ட் பிளேரில் இருந்து மற்ற தீவுகளுக்கு 2 x 100 கிகாபைட்ஸ் வேகத்தில் நெட்வொர்க் சேவை வழங்கப்படும்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''தனிநபர் பயன்பாடு மற்றும் அரசின் பயன்பாட்டிற்கு என்று செய்யப்பட்டு இருக்கும் இந்த கேபிள் திட்டம் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. சாட்டிலைட் வாயிலாக அதிவேக நெட்வொர்க் சர்வீஸ் வழங்குவது தடைபட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது 4G சேவை வழங்குவதன் மூலம் அதிவேக நெட்வொர்க் சேவை கிடைக்கும்.
டேபிள் டாப்.. நீங்களே படத்தை பாருங்க.. இப்படி ரன்வே இருந்தால் எப்படி விமானத்தை நிறுத்த முடியும்?
இந்த கேபிள் இணைப்பு மூலம் அங்கு இருக்கும் தொழில் நிறுவனங்களும் நல்ல முன்னேற்றம் அடையும். கல்வி நிறுவனங்களும் மேம்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு 2,300 கி.மீட்டர் தொலைவுக்கு ரூ. 1,224 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கேபிளை பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டும், டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட் நிறுவனமும் இணைந்து செயல்படுத்தியுள்ளன.