டெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கிறார்
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார் என அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
இந்திய மக்களவைக்காக 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில், பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என சொல்லப்படுகிறது.
என்னாது போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா?.. இதோ புதிய கருத்து கணிப்பு
விருந்து
இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு டெல்லியில் இன்று இரவு அசோகா ஸ்டார் ஹோட்டலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விருந்தளிக்கிறார்.
அழைப்பு
விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதை தவிர கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழிசை தகவல்
தமிழகத்தில் இருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ், டாக்டர் ராமதாஸ் அல்லது டாக்டர் அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், எல்கே.சுதீஷ், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், பெஸ்ட் ராமசாமி, சரத்குமார், ஜான் பாண்டியன், கார்த்திக், என்ஆர் தனபாலன், பூவை ஜெகன்மூர்த்தி, தேவநாதன் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.
|
பாமக பாலு
அந்த வகையில், பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ் விருந்தில் கலந்துகொள்ள உள்ளார். இதனை அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார்" என பாலு பதிவிட்டுள்ளார்.