சத்தமில்லாமல் மாஸ் காட்டும் அன்புமணி ராமதாஸ்.. பாமகவின் அமைதிக்கு இதுதான் காரணமா!
அன்புமணி ராமதாசுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்க என்ன காரணம்?
Recommended Video
சென்னை: சத்தமே இல்லாமல் மக்களிடம் மாஸ் காட்டி வருகிறார் அன்புமணி ராமதாஸ்!! அதனால்தான் மக்களிடம் இவரது செல்வாக்கு உயர்ந்தே வருகிறது.
அதிமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, அமமுக போன்ற கட்சிகளை தாண்டி பாமகவின் வளர்ச்சி அதிகரித்து வந்துள்ளது.
இந்தியா டுடே கருத்து கணிப்பின் மக்கள் செல்வாக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல் இடத்திலும், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர் என்றால் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
ரொம்ப சிம்பிள்
இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? ரொம்ப சிம்பிள்... மக்களுடனான நெருக்கத்தை அன்புமணி இன்னமும் விடவில்லை. கடந்தமுறை தேர்தலின்போது, திமுகவின் பின்னடைவுக்கு பாமகவின் இந்த மக்களின் சந்திப்புதான் முக்கிய காரணியாக இருந்தது. பாமகவால்தான் முக்கிய தொகுதிகளை திமுக இழந்தது. அதனால்தான் 3-வது இடத்தை பாமகவால் அன்று பிடிக்க முடிந்தது.
3-வது இடம்
அன்றைய தினம்போலவே இன்றும் 3-வது இடத்தை இந்த கருத்து கணிப்பில் பாமக பெற்றுள்ளது ஆச்சரியத்தை தருகிறது. ஏனென்றால் அன்புமணியின் செல்வாக்கு 2 சதவீதம் உயர்ந்துள்ளது. அக்டோபரில் 7 சதவீதம் பேர் தமிழக முதல்வராக அன்புமணி ராமதாஸ் வர வேண்டும் என விரும்பியுள்ளனர். ஜனவரியில் 9 சதவீதம் பேர் தங்கள் விருப்பத்தை கூறி அன்புமணியின் செல்வாக்கை உயர்த்தி உள்ளனர்.
பிள்ளையார் சுழி
இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால், விடாமல் மக்களை விரட்டி பிடித்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார் அன்புமணி. அன்புமணியின் "முதல்வராக நான்" என்பதுதான் பிள்ளையார் சுழி போட்டு தந்தது. இன்றுவரை இந்த ஃபார்முலாதான் அக்கட்சிக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. பொதுமக்களின் பிரச்சனைகளை நேரடியாக அன்புமணி கேட்டு வருகிறார். அதில் பல பிரச்சனைகளை அடிப்படையில் அதை அணுகுகிறார்.
தவறான கண்ணோட்டங்கள்
இப்படி அன்புமணி பொதுமக்களை நேருக்கு நேர் சந்தித்து பேசுவதுடன், தன்னிடம் நிறைய கேள்விகளை பொதுமக்களை கேட்க சொல்கிறார். குறிப்பாக மாணவர்களிடத்தில் மைக்குகளை கொடுத்து எந்த கேள்வியானாலும் கேளுங்கள் என்று சொல்லி அசராமல் அதற்கெல்லாம் பதிலளித்து வருகிறார். இதனால் பாமக மீதான சில அடிப்படை சந்தேகங்கள், விமர்சனங்கள், தவறான கண்ணோட்டங்கள் போன்றவை மக்களுக்கு அடியோடு குலைந்து போகின்றன.
அச்சாரம் போட ஆர்வம்
ஏற்கனவே வட மாவட்டங்களை தன் கையில் இறுக்க பிடித்து வைத்துள்ளது பாமக. கூடவே இதுபோன்ற கூட்டங்களை நடத்தி வருவதுதான் பாமகவின் செல்வாக்கு மக்களிடையே கூடி வர காரணமாக இருக்கிறது. இந்த செல்வாக்குதான் அதிமுக போன்ற பலம் வாய்ந்த கட்சிகளே பாமகவுடன் கூட்டணி சேர அச்சாரம் போட வைக்க காரணமாக இருக்கிறது.
அன்புமணி ரகசியம்
அதனால் அன்புமணியின் களப்பணியே கட்சியை வலிமைப்படுத்தி, வளப்படுத்தி, இன்று செல்வாக்கு உயர காரணமாக இருந்திருக்கிறது. மக்களை பார்க்க தயங்கும், மக்களை நேருக்கு நேர் சந்திக்க யோசிக்கும் கட்சிகள்தான் பெரும் பின்னடைவையும் மக்களின் அதிருப்தியையும் இன்று சம்பாதித்து வருகின்றன. இதற்கெல்லாம் பதிலடியாகத்தான் இந்தியா டுடே கருத்து கணிப்பில் அன்புமணி செல்வாக்கின் ரகசியம் பொதிந்துள்ளது.