நீட் தேர்வு...மாணவன் தற்கொலை...ஆனா நடிகைக்கு முக்கியத்துவம்..அன்புமணி ராமதாஸ் சாடல்!!
சென்னை: நீட் தேர்வால் மாணவச் செல்வங்களின் உயிர்களை பறி கொடுத்து வருகிறோம். இந்த துயரங்களுக்கு முடிவு கட்ட நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டரில், ''அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.
மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தாத நீட் தேர்வால் நாம் இன்னும் எத்தனை மாணவச் செல்வங்களின் உயிர்களை பறி கொடுக்கப் போகிறோம். இந்த துயரங்களுக்கு முடிவு கட்ட நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட செய்திக்கு எந்த ஊடகமும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. நடிகைகளின் கைது செய்திகள் தான் விவாதப் பொருளாகின்றன. ஏழை மாணவர்களின் துயரம் மீது ஊடகங்கள் அக்கறை காட்ட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
பாமக ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும்... அன்புமணி ராமதாஸ் போடும் புதுக் கணக்கு