உறுதியானது அதிமுக+பாம கூட்டணி.. ஒட்டுமொத்த வன்னியர்கள் களப்பணியாற்ற வேண்டும்- ராமதாஸ் அதிரடி அழைப்பு
சென்னை: வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள் எனவே அதிமுக கூட்டணி வென்றது என்று பெயர் இருக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கக்கோரிய மசோதா தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசை பாமகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்றப்பின்தான், கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பிடித்தது.
வன்னியர்கள் இட ஒதுக்கீடு
வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு துரித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததால், அதிருப்தியில் இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் சட்டமன்ற தேர்தலில் தனித்துப்போட்டியிட முடிவு செய்தததாகவும் அல்லது கூட்டணி மாறிவிடுவார் என்றும், தகவல் வெளியானது. ஆனால் இப்போது இட ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேறியதால், கூட்டணி வலுப் பெற்றது.
|
ராமதாஸ் ட்வீட்
இந்த நிலையில்தான், ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் வென்றார்கள்! வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்... அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணி அமைய வேண்டும்! இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இடைத் தேர்தல் உழைப்பு
இதன் மூலம், அதிமுக கூட்டணியில் பாமக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2019ல் கடந்த லோக்சபா தேர்தல் முதல் அதிமுக-பாமக கூட்டணி அமைந்தது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியில் பாமகவுக்கு அதிக பங்கு இருந்தது.
தேமுதிக சஸ்பென்ஸ்
ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பாமகவும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் கடந்த லோக்சபா தேர்தல் கூட்டணி அப்படியே தொடரப்போகிறது. இந்த கூட்டணியில் உள்ள தேமுதிகவுடன் இதுவரை கூட்டணி பற்றி அதிமுக தலைமை பேசவில்லை. எனவே அந்த கட்சி விஷயத்தில் மட்டும் சஸ்பென்ஸ் தொடர்கிறது.