ஊழல் துணைவேந்தர் கணபதியை காப்பாற்ற சதி நடக்கிறதா.. டாக்டர் ராமதாஸ் கேள்வி
சென்னை : பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கில் உடனடியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, கணபதி உள்ளிட்டோருக்கு தண்டனை பெற்றுத் தர லஞ்ச தடுப்புப்பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு 30 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக துணை வேந்தர் கணபதி கைது செய்யப்பட்ட வழக்கில், 10 மாதங்களாகியும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
உலக அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய இந்த வழக்கில் நீதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. இந்த ஊழல் வழக்கு குற்றப்பத்திரிகை செய்ய முடியாத அளவுக்கு மிகவும் சிக்கலான வழக்கு அல்ல.
தாமதமாவது ஏன்?
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்ட சுரேஷ் என்பவரிடமிருந்து லஞ்சப் பணத்தை துணைவேந்தர் கணபதி அவரது இல்லத்தில் வைத்து வாங்கிய போது தான் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
வழக்கின் எதிரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கின்றன. இத்தனை ஆதாரங்கள் இருந்தும் குற்றப்பத்திரிகை தாமதமாவது பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளது.
காவல்துறையினர் தாமதம்
கிரிமினல் வழக்குகளை போலவே லஞ்ச வழக்குகளிலும் 90 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். வழக்கில் கணபதி கைது செய்யப்பட்டு 310 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்சத் தடுப்புப் பிரிவினர் தாமதம் செய்கிறார்கள் என்றால் அது இயல்பாக நடப்பதாக தெரியவில்லை.
மிரட்டல்
பல்கலைக்கழக நிர்வாகங்கள் தூய்மைப்படுத்தப் பட்டிருப்பதாக பெருமைப் பட்டுக் கொள்ளும் தமிழக ஆளுநர், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களை இன்னும் வழங்கவில்லை என்பது உண்மை என்றால் அது பெரும் குற்றம். விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கணபதி தமக்கு கிடைத்த பணத்தில் இப்போதுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எவ்வளவு பங்கு தரப் பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை வெளியிடப்போவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
விடுதலை உறுதி?
அதையடுத்து அவருக்கும், அமைச்சர் தரப்புக்கும் செய்து கொள்ளப்பட்ட எழுதப்படாத சமரச உடன்பாட்டின்படி தான் கணபதி மீதான வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருவதாகவும், இவ்வழக்கில் ஊழல் குற்றவாளி கணபதி விடுதலை செய்யப்படுவது உறுதி என்றும் உயர்கல்வித்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
நீதி, நேர்மை படுகொலை
லஞ்சம் வாங்கி பிடிபட்ட கணபதி குற்றமற்றவர் என்று கூறி விடுவிக்கப்பட்டால் அந்த நாள் தான் நீதியும், நேர்மையும் படுகொலை செய்யப்பட்ட நாளாக இருக்கும். அதன்பின் ஊழலைப் பற்றி பேசுவதே அர்த்தமற்றதாகி விடும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது.
தண்டனை
எனவே, கோவை பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கணபதி உள்ளிட்டோருக்கு தண்டனை பெற்றுத் தர லஞ்சத் தடுப்புப்பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.