கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில்.. பாமக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி
சென்னை: சென்னையைப் போன்று கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் உட்கட்டமைப்புத் தேவையை மதிப்பீடு செய்து, நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு கட்டமைப்பு ஆணையம் என்ற புதிய அமைப்பைத் தமிழக அரசு உருவாக்கும். தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தமிழ்நாடு கட்டமைப்பு ஆணையத்தின் மூலம் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.25 இலட்சம் கோடியில் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அடடே.. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 1 வருடம் பேறுகால விடுப்பு- பாமக தேர்தல் அறிக்கை
விமான நிலையம்
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான நிலங்கள் செங்கல்பட்டு அருகே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மிகவிரைவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நகர பேருந்துகள்
தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களுக்கும் பேருந்து சேவை உறுதி செய்யப்படும். 200க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் இயக்கப்படும். இருநூறுக்கும் குறைவான மக்கள் வாழும் ஊர்களுக்கு அரசு சிற்றுந்து சேவை அறிமுகம் செய்யப்படும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்று, இதுவரை ஓய்வூதியப் பயன்கள் கிடைக்காத அனைவருக்கும் அடுத்த 3 மாதங்களில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவுப் போக்குவரத்து
சென்னையில் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தும் நோக்குடன் பேருந்து விரைவுப் போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னைக்கு வெளியே முதல்கட்டமாக மதுரை, கோவை ஆகிய நகரங்களில் பேருந்து விரைவுப் போக்குவரத்துத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மெட்ரோ ரயில்
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் அடுத்தகட்டமாக விமான நிலையம் முதல், புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். சென்னையைப் போன்று கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில் மெட்ரோ இரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
மின்சாரம்
தமிழ்நாட்டில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன்பாடு கணக்கிடப்படும் முறையை மாற்றி, மாதத்திற்கு ஒருமுறை மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறை அறிமுகப் படுத்தப்படும். மின்பயன்பாடு இரு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடப்பட்டால், 1,000 யூனிட் பயன்படுத்தும் ஒரு வீட்டிற்கு ரூ.5,080 மின் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மாறாக, மாதத்திற்கு ஒருமுறை மின் பயனீட்டு அளவு கணக்கிடும்போது ஒரு மாதத்திற்கு 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ.1,130 மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
மின் கட்டணம் மிச்சம்
இரு மாதங்களுக்கு ரூ.2,260 கட்டணம் செலுத்துவதாக வைத்துக் கொண்டால் மின்கட்டணம் 56% வரை மிச்சமாகும். இது மின்சாரக்கட்டணத்தைப் பாதியாகக் குறைப்பதைவிட, நுகர்வோருக்கு அதிக இலாபம் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அனல்மின் நிலையங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், 2025ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக அனல் மின் நிலையங்களைத் தமிழக அரசு அமைக்காது. இப்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களும், அதன் வாழ்நாள் காலம் முடிவடைந்த பிறகு செயலிழக்கச் செய்யப்படும். அவற்றுக்குப் பதிலாகக் காற்றாலை மற்றும் சூரியஒளி மின்சார உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கடல் நீர் குடிநீர்
தமிழ்நாட்டின் எல்லா மக்களுக்கும் போதுமான அளவு தூய்மையான குடிநீர் கிடைக்க வழி செய்தல். அனைத்து நகரப்பகுதிகளிலும் வீடுகளுக்குக் குழாய் மூலம் தூய குடிநீரை அளித்தல். விலைகொடுத்து வாங்கும் பாட்டில் தண்ணீருக்கு மேலான தரத்தில் குடிநீர்த் தேவைக்கான தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் அளித்தல். சென்னைக்கு தடையின்றி குடிநீர் வழங்க வசதியாக சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதிகளில் மொத்தம் 4 இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்படும். மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.