எல்.கே.ஜி முதல் +2 வரை அனைவருக்கும் இலவச கல்வி.. பாமக அதிரடி தேர்தல் அறிக்கை
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி சட்டசபை தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. கட்சி நிறுவனர் ராமதாஸ், கட்சி எம்பி அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இணைந்து இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டனர்.
பொதுவாக பாமக தேர்தல் அறிக்கை தொலைநோக்கு பார்வை கொண்டதாக இருக்கும் என்று பல தரப்பாலும் பாராட்டப் படக்கூடிய ஒன்று. எனவே அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
காணொலி காட்சி மூலம் ராமதாசால் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. வளர்ச்சிமிகு தமிழகம் படைப்போம் என்று தேர்தல் அறிக்கைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை அனைவருக்கும் இலவச கல்வி என்பது இதில் பெரும் ஹைலைட் அம்சமாகும்.
தமிழகத்தில் பூரண மது விழக்கு, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வன்னியர்களுக்கு கூடுதலாக இட ஒதுக்கீடு, தங்கம், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தற்போது, பாமக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இங்கு 23 தொகுதிகள் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்ற நிலையில் கட்சிக்கான தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்விக் கட்டணம்
மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித் தாகத்தையும் வலுப்படுத்துவதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அரகப் பள்ளிகளுக்கு மாறும் சூழலை உருவாக்க வேண்டும் என்பது தான் அரசின் இலக்கு ஆகும்
10ம் வகுப்பு, பிளஸ் டூ மாணவர்களுக்கு நிதியுதவி
தமிழ்நாட்டில் ஒரு மாணவருக்கு ஓராண்டுக்கு கல்வி வழங்குவதற்கான அரசின் செலவு இப்போதுள்ள ரூ.32 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்படும், பள்ளிக் கல்விக்கான ஆண்டு ஒதுக்கீட்டை ரூ.80,000 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500 வீதமும், மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதமும் நிதியுதவி அளிக்கப்படும்
9ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி
2021 - 2022ஆம் ஆண்டு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் தேர்வுமுறை, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். மாணவர்களின் ஆங்கில மொழித் திறனையும், ஆங்கிலத்தில் பேசும் திறனையும் வலுப்படுத்த சிறப்புப் பயிற்சி.
தேசிய நுழைவுத் தேர்வு
தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள 9ஆம் வகுப்பில் இருந்து சிறப்புப் பயிற்சி. அரசுப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்யப்படும்.
வெளிநாடுகளுக்கு செல்லலாம்
உயர்கல்வி கற்பதற்கான பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை. கடன் தொகையை தமிழக அரசே வங்கிகளுக்குச் செலுத்தும் வருமான வரம்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு உயர்கல்வி இலவசமாக வழங்கப்படும் அரசுப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் 1000 பேரும், மாணவிகளில் 1000 பேரும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உயர்கல்வி பயில அனுப்பப்படுவார்கள். செலவை அரசே ஏற்கும்.