கவலையே இல்லை.. எங்கள் கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வி... சொல்வது டாக்டர் ராமதாஸ்
Recommended Video
சென்னை: எந்த அதிகாரமும் இல்லாத திமுகவுக்கு வாக்களித்ததால் தங்களது கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வி என விமர்சித்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
லோக்சபா தேர்தல் முடிவுகளை முன்வைத்து தொண்டர்களுக்கு ராமதாஸ் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் உங்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம். மிகவும் நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகள், அதற்கு முற்றிலும் மாறாக அமையும்போது ஏமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.
கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கு ராமதாஸ் வரவேற்பு.. விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தல்
முடிவுகளால் ஏமாற்றம்
நம்மால் நேசிக்கப்படும் ஒருவருக்கு இழப்பு ஏற்படும்போது எவ்வாறு நமக்கு ஏமாற்றம் ஏற்படுமோ, அதுபோன்றது தான் இதுவும். தேர்தல் முடிவுகள் எனக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தின.
கலங்கவில்லை நான்..
தேர்தல் முடிவுகள் ஏமாற்றத்தை மட்டும் தான் ஏற்படுத்தினவே தவிர, எனக்குள் எந்தவித கவலையையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் பாட்டாளி சொந்தங்களாகிய நீங்கள் தான். நீங்கள் மட்டும் தான்.
திமுக எதுவும் செய்யாது
நடப்பு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால், மத்தியில் மோடி தலைமையிலான அரசின் துணையுடன், தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்போம். அது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் பெரும் பங்காற்றியிருக்கும். ஆனால், தேசிய அளவில் படுதோல்வி அடைந்து, தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ள தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மைகளை செய்ய முடியும்? என்று தெரியவில்லை.
மக்களுக்கான தோல்வி
மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதே, தங்களை வளப்படுத்திக் கொண்டு மக்களுக்காக எதையும் செய்யாத தி.மு.க., இப்போது எந்த அதிகாரமும் இல்லாத சூழலில் எதை சாதிக்க முடியும்?. அந்த வகையில் பார்த்தால், தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணியின் தோல்வி மக்களின் தோல்வியாகவே அமைந்துள்ளது.
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.