மதுக்கடைகள் திறப்பு... மதுநீதிச் சோழன் வாழ்க - டாக்டர் ராமதாஸ் நக்கல் பதிவு
சென்னை: டாஸ்மாக் மது விற்பனைக் கடைகள் இன்று தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நிலையில் நவீன மதுநீதிச் சோழன்! என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.
Recommended Video
கொரோனா லாக்டவுன் தளர்வுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. இன்று முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது. போலி மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தனது முகநூல் பக்கத்தில், தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க தண்ணீரை ஊற்ற வேண்டிய தமிழக அரசு, பெட்ரோலை ஊற்றிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை அணைக்க மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் சமூகப் பொறுப்பும், மக்கள் நலனில் அக்கறையும் இல்லாமல் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதித்திருப்பதை இப்படித் தான் வர்ணிக்க வேண்டியுள்ளது என்று பதிவிட்டிருந்தார் டாக்டர் ராமதாஸ்.
இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நிலையில் நவீன மதுநீதிச் சோழன்!
என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். அவரது பதிவை அப்படியே தருகிறோம்.
அந்த சோழமன்னனின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை அந்த பசு அடித்தது.
அதைக் கேட்டதும் மன்னனின் மந்திரிமார்கள் ஓடிவந்து பசுவிடம் குறை கேட்டனர்.
அந்த பசு கூறியது," மந்திரியார்களே.... எனக்கு இரு கன்றுக்குட்டிகள். அவற்றில் ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. சற்று முன் தேரில் வந்த இளவரசர் நல்ல உடல் நலத்துடன் இருந்த கன்றின் மீது தேர்ச்சக்கரத்தை ஏற்றி கொன்று விட்டார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட கன்று இறந்திருந்தாலாவது, அந்த கன்று அவதிப்படாமல் இறந்து விட்டதே என்று என் மனம் திருப்தியடைந்திருக்கும். ஆனால், எங்கள் குலக் கொழுந்தாக திகழ வேண்டிய நல்ல உடல்நிலையுடன் இருந்த கன்றை இளவரசர் கொன்று விட்டார். நீங்கள் தான் மன்னரிடம் இதை எடுத்துக் கூறி எனக்கு நீதி வழங்க வேண்டும்" என்று பசு முறையிட்டது.
மந்திரிமார்களும் மன்னனிடம் சென்று பசு நீதி கேட்ட கதையை கூறினார்கள். அதைக் கேட்ட மன்னர், மந்திரியாரின் காதுகளில் எதையோ கூறி, '' நான் கூறியது போல அந்த பசுவுக்கு நீதி வழங்குங்கள்" என்று கட்டளையிட்டார்.
அரண்மனையிலிருந்த அனைவரும் திகைத்தனர். பசுக் கன்றை கொன்ற இளவரசனை படுக்க வைத்து அவர் மீது தேரை ஏற்றிக் கொல்ல மன்னர் ஆணையிட்டிருக்கிறார் என்று நினைத்தனர்.
மந்திரியாரும், சேனைத்தலைவரும் தேரை எடுத்துக் கொண்டு பசுவின் இருப்பிடத்திற்கு விரைந்தனர். அதைப் பார்த்த மற்றவர்கள், '' பார்த்தாயா எங்கள் மன்னர் அடித்த சிக்சரை! பசுவின் இருப்பிடத்தில் வைத்து இளவரசர் மீது தேரை ஏற்றி நீதி வழங்கப்போகிறார் எங்கள் மன்னர்" என்று கதையளந்தனர்.
ஆனால், நேராக பசுவின் இருப்பிடத்திற்கு சென்ற மந்திரியாரும், சேனைத் தலைவரும் அங்கு நடக்க முடியாமல் நலிவடைந்த நிலையில் படுத்துக் கிடந்த இன்னொரு கன்றுக் குட்டி மீது தேரை ஏற்றிக் கொன்று விட்டு வெற்றிக் களிப்புடன் அரண்மனைக்கு திருப்பினர்.
இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க!
எங்கோ ஒரு மூலையிலிருந்து முழக்கம் எழுந்தது. "எங்கள் மதுநீதிச் சோழன் வாழ்க!"
என்று பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். மனுநீதி சோழன் கதையை மதுநீதிச் சோழன் என்று கிண்டலடித்து பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமாதாஸ்.