மழையை ஸ்டாப் என்று சொன்ன கொள்ளுப்பேரன்... டாக்டர் ராமதாஸின் முகநூல் பதிவில் பெருகிய உணர்ச்சி வெள்ளம்
அன்புமணி ராமதாஸின் பேரன்,பேத்திகளுடன் கொஞ்சி விளையாடும் டாக்டர் ராமதாஸ் தனது அனுபவங்களை கொள்ளுப் பெயரனும், நானும்! என்று தலைப்பிட்டு முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை: மழை பெய்து கொண்டிருந்த போது, அகிராவை அழைத்து மழையை நிறுத்தும்படி கூறினேன். அவனும் திண்ணையில் சென்று நின்று கொண்டு மழையைப் பார்த்து ஸ்டாப் என்று பலமுறை கூறினான். ஆனால், மழை நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் சலித்துப் போய் திரும்பி விட்டான். தனது கொள்ளுப்பேரன் பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் டாக்டர் ராமதாஸ் தனது அனுபவங்களை கொள்ளுப் பெயரனும், நானும்! என்று தலைப்பிட்டு முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
''குழல் இனிது யாழ் இனிது என்ப - தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்'' என்றார் வள்ளுவர். இது மழலைப் பருவத்தில் பேசும் மொழி புரியாத சொற்களுக்கு மட்டுமல்ல.... உலகம் புரியாமல் அன்பின் வெளிப்பாடாக அவர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் பொருந்தும்.
Recommended Video
எனது கொள்ளுப் பெயரன் அகிரா, கொள்ளுப்பெயர்த்தி மிளிர் ஆகியோர் சில நாட்களுக்கு முன் அவர்களின் பெற்றோருடன் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்திருந்தனர். அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. மழையிடம் சென்று ஸ்டாப் என்று கூறினால் மழை நின்று விடும் என்ற எண்ணம் குழந்தைகள் உலகில் பொதுவானது. எனது கொள்ளுப்பெயரனுக்கும் அந்த எண்ணம் உண்டு.
மழை பெய்து கொண்டிருந்த போது, அகிராவை அழைத்து மழையை நிறுத்தும்படி கூறினேன். அவனும் திண்ணையில் சென்று நின்று கொண்டு மழையைப் பார்த்து ஸ்டாப் என்று பலமுறை கூறினான். ஆனால், மழை நிற்கவில்லை. ஒரு கட்டத்தில் சலித்துப் போய் திரும்பி விட்டான்.
அவனிடம் என்னடா மழையை நிறுத்தவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அகிரா,'' இல்ல தாத்தா. இப்பல்லாம் மழை சொன்ன பேச்சை கேட்க மாட்டேன்கிறது" என்று சாதாரணமாக கூறி விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.
எனது தைலாபுரம் தோட்ட இல்லத்தின் வெளி முற்றத்தில் நீரூற்று ஒன்று இருக்கும். அதன் அருகில் சென்று பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு பிரியம். ஒரு நாள் இரவில் ஃபவுண்டனை (நீரூற்று) பார்க்க வேண்டும் என்று கூறினான். உடனே வீட்டில் இருந்தவர்கள் 'இரவு நேரத்தில் ஃபவுண்டன் தூங்கியிருக்கும்' என்று கூறி விட்டார்கள்.
உடனடியாக படுக்கை அறைக்குச் சென்ற அகிரா, ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு வெளியில் ஓடினான். எதுக்குடா அது? என்று கேட்ட போது, 'தூங்குறப்ப ஃபவுண்டனுக்கு குளிருமில்ல. அதுக்கு தான் போத்தி விடப் போகிறேன்' என்று பதிலளித்தான்.
நிலவு குறித்து புலவர்கள் பலவிதமாக கற்பனை செய்திருக்கிறார்கள். ஆனால், அகிராவின் வர்ணனை வேறு லெவல். ஒரு முறை முழுநிலவு எப்படி இருக்கிறது என்று அவனது தாத்தா அன்புமணி கேட்ட போது, இட்லி மாதிரி இருக்குது என்றானே பார்க்கலாம். வீட்டிலிருந்த அனைவரும் அசந்து விட்டனர்.
குழந்தைகள் உலகம் எவ்வளவு இனிமையானது என்பது இப்போது புரிகிறதா சொந்தங்களே? அகிரா, மிளிர் இரட்டைக் குழந்தைகளுக்கு வயது இரண்டே கால். தைலாபுரம் தோட்டத்தில் அவர்களுடன் விளையாடும் போதெல்லாம் நானும் ஒரு குழந்தையாக மாறி விடுவேன்.
பின் குறிப்பு: ஏற்கனவே ஒரு முறை மழை பெய்த போது எங்கள் வீட்டுக்கு வெளியில் இருக்கும் யானை சிலைகளை யானையாக நினைத்துக் கொண்டு அவை நனைந்து விடக் கூடாது என்பதற்காக குடை பிடிக்க முயன்ற குழந்தை தான் அகிரா.