எட்டு வழிச்சாலையை வைத்து.. மீண்டும் வெடித்தது அரசியல் வார்த்தைப் போர்..!
சேலம் 8 வழிச்சாலை சம்பந்தமாக அரசியல் கட்சிகள் மீண்டும் மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
Recommended Video
சென்னை: அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை.. சரி.. ஆனால் கொள்கைகூட இல்லாமல் போகும் என்பதும், உறுதியான நிலைப்பாடும் இல்லாமல் போகும் என்பதும் நாளுக்கு நாள் நிரூபணமாகி வருகிறது. தற்போது எட்டு வழிச் சாலையை வைத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் இடையே ஒரு வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
சேலம் 8 வழிச்சாலை தமிழகத்தை உலுக்கிய மிகப் பெரிய போராட்டம். முதலில் விவசாயிகள் போராட்டம் நடத்த, பாமக, நாம் தமிழர், திமுக உள்ளிட்ட கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கூடவே சேர்ந்து போராடின. கோர்ட்டுக்கும் விவகாரம் சென்றது.
இந்த வழக்கில் 8 வழிச் சாலை திட்டம் செல்லாது என்று சமீபத்தில் சென்னை ஐகோர்ட் தடை விதித்து, விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதில்லை, தீர்ப்பை அமல்படுத்த ஒத்துழைக்க போவதாகவும் கூறினார்.
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உயிரிழப்பு.. சுஷ்மா சுவராஜ் உறுதி
ஐகோர்ட் தீர்ப்பு
இப்போது விஷயம் என்னவென்றால், அன்று இதே 8 வழிச்சாலையை எதிர்த்த காங்கிரஸ், இன்று இந்த திட்டத்தை வரவேற்றுள்ளது. அதாவது தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ். அழகிரி, "சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டம் மட்டுமல்ல, எந்த சாலை திட்டமாக இருந்தாலும் அதை காங்கிரஸ் வரவேற்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.
கேஎஸ் அழகிரி
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் அழகிரி பேசுகையில், "60 நாளில் அவசர கதியில் திட்டம் தீட்டியது தமிழக அரசு. மேலும் சென்னை மதுரை சாலையை கையில் எடுக்காமல் உள்நோக்கத்துடன் சேலம் எட்டு வழிச்சாலையை கையில் எடுத்ததால்தான் கோர்ட் தலையிட்டது. நெறிமுறைப்படி செயல்பட்டிருந்தால், கோர்ட் தலையிட்டிருக்காது. இவர்களது உள்நோக்கத்தால்தான் பெரிய திட்டம் ஒன்று பாழடிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியிருந்தார் கே.எஸ். அழகிரி.
|
டாக்டர் ராமதாஸ்
உடனே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இது சம்பந்தமாக 2 ட்வீட் போட்டுள்ளார். அதில், "8 வழிச்சாலை மட்டுமல்ல... இன்னும் எத்தனை சாலைத் திட்டங்கள் வந்தாலும் வரவேற்போம்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி - தேர்தல் வரை ‘பரி'களாக இருந்தவர்கள் தேர்தலுக்குப் பின் வேடம் கலைந்து நரிகளாக மாறியிருக்கின்றனர். வாழ்க வேடதாரிகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
|
முக ஸ்டாலின்
மற்றொரு ட்வீட்டில், "8 வழிச்சாலைத் திட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு. இதே பிரச்சினைக்காக அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுமா? என்று கேட்ட மு.க.ஸ்டாலின் இப்போது என்ன சொல்லுவார்? முகத்தை எங்கே திருப்பி வைத்துக் கொள்வார்?" என்று கேள்வி கேட்டுள்ளார்.
10 அம்ச கோரிக்கை
முதலில் டாக்டர் ராமதாஸ் 8 வழிச்சாலை தீர்ப்பை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா என தெரியவில்லை. ஏனெனில் 8 வழிச் சாலை இருக்கக்கூடாது என்பதற்காக போராடியதும், முதலில் இது சம்பந்தமாக எதிர்த்து வழக்கு போட்டதும் நாம் தமிழர் கட்சிக்கு அடுத்தபடியாக பாமகதான்! இரண்டாவதாக, அதிமுகவுடன் இதற்காக கூட்டணி வைத்தோம் என்று சொல்லி பத்து அம்சக் கோரிக்கை பாமக தரப்பில் வைக்கும்போது, அதில் 8 வழிச்சாலை பற்றி குறிப்பிடவே இல்லை.
நிதின் கட்காரி
மூன்றாவதாக, சேலத்தில் பிரச்சாரம் செய்ய வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டாக்டர் ராமதாஸை உட்கார வைத்து கொண்டேதான் சொன்னார். இதற்கு இவர்கள் இருவருமே வாய் திறக்காமல் அமைதியாக கேட்டு கொண்டுதான் இருந்தார்கள்.
சலசலப்பு
ஆக, டாக்டர் ராமதாசின் நிலைப்பாடே நமக்கு தெளிவாக தெரியாத நிலையில், கேஎஸ் அழகிரியை கிண்டல் செய்ததுடன், ஸ்டாலின் முகத்தை எங்கே தூக்கி வைத்து கொள்வார் என்றும் கேட்டுள்ளார். ஆனால் தற்போது காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சேலம் எட்டு வழிச்சாலையை ஆதரித்துப் பேசியுள்ளது அடுத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டிக்கவில்லை
இதேதான் திமுக-காங்கிரஸ் நிலைமையும்... தேர்தல் முடியும்வரை 8 வழிச்சாலையை எதிர்க்கிறது காங்கிரஸ்.. இப்போது மத்திய அரசின் திட்டத்தை ஆதரிக்கிறது.. இதற்கு என்ன காரணம்? இதை ஏன் திமுக தலைவர் இன்னமும் கண்டிக்காமல் இருக்கிறார்? ஒருவேளை திமுகவுக்கும் இதில் உடன்பாடு உள்ளதா? அல்லது சீமான் சொல்வது போல, காங்கிரசும், பாஜகவும் ஒன்றுதானா? என்றெல்லாம் தெரியவே இல்லை. ஆனால் தற்போது இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி விரிவான பேட்டி அளித்து விளக்கியுள்ளார். அதில், எட்டு வழிச்சாலையை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அதில் உள்ள விதி மீறல்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். யாரும் சுய லாபம் அடையக் கூடாது என்பதே எங்களது கருத்து என்று கூறியுள்ளார்.