7 தமிழர் விடுதலையில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என சிபிஐ மனு- டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னிச்சையாகவே முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்திருப்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் 2 ஆண்டுகளாக தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் தரவில்லை.
சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணை அறிக்கைக்கு (எம்.டி.எம்.ஏ) காத்திருப்பதாக ஆளுநர் பன்வாரில் புரோஹித் தரப்பு தெரிவித்தது. ஆளுநரின் இந்த தாமதத்துக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்தது.
மேலும் எம்.டி.எம்.ஏ. அறிக்கைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தாங்கள் நடத்தும் விசாரணைக்கும் ஆளுநர் முடிவெடுப்பதற்கும் தொடர்பு இல்லை என கூறியிருந்தது. சிபிஐ-ன் இந்த பதிலை வரவேற்று டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பேரறிவாளன் விடுதலைக்கும், எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் தொடர்பு இல்லை; விசாரணை அறிக்கையை ஆளுனருக்கு தர மாட்டோம்; ஆளுனர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியிருக்கிறது. இது மிகச்சரியான நிலைப்பாடு ஆகும்.
பேரறிவாளன் விடுதலையில் எங்களுக்கு தொடர்பு இல்லை.. ஆளுநரின் கையில்தான் இருக்கிறது- சிபிஐ திட்டவட்டம்
எம்.டி.எம்.ஏ விசாரணைக்கும் பேரறிவாளன் விடுதலைக்கும் தொடர்பு இல்லை என சிபிஐ கூறிவிட்ட நிலையில், சொத்தைக் காரணத்தைக் கூறி இனியும் தாமதிக்காமல் பேரறிவாளன் விடுதலை குறித்தும், மற்ற 6 தமிழர்கள் விடுதலை குறித்தும் தமிழக ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.