அடுத்தடுத்து.. அதிரடியாக... மத்திய அரசுக்கு எதிராக சீறும் ராமதாஸ்...காரணம் இடஒதுக்கீடு விவகாரம்?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மத்திய அரசுக்கு எதிராக தனது அறிக்கைகள் வாயிலாக தொடர்ந்து சீறி வருகிறார்.
மருத்துவப் படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை மறுக்க மத்திய அரசுக்கு உரிமையில்லை எனக் கூறி அறிக்கை வெளியிட்ட அவர், 50 மாதமாக கிடப்பில் இருக்கும் நீட் தேர்வை உடனே விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாஜக, அதிமுக, அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இருந்தாலும் தனது கருத்தை சமரசத்திற்கு இடமின்றி முன் வைத்து வருகிறார் ராமதாஸ்.
அறிக்கைகள்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மத்திய அரசு மீது அதிருப்தியில் இருப்பது அவரது அறிக்கைகள் மூலம் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. ஓபிசி இட ஒதுக்கீடு, நீட் தேர்வு, விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகள் ராமதாஸை சினம் கொள்ளச் செய்துள்ளது. இதன் காரணமாகவே மத்திய அரசை விமர்சித்து அவர் அறிக்கை வெளியிடத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே இட ஒதுக்கீடு தொடர்பாக கடுமையாக விமர்சித்து அன்புமணி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு
மருத்துவப் படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும், கண்டிக்கத்தக்கது எனவும் ராமதாஸ் சாடியுள்ளார். இதேபோல் நீட் தேர்வு விவகாரத்திலும் மத்திய அரசின் நிலைப்பாட்டை ராமதாஸ் எதிர்த்து வருகிறார். கூட்டணி வேறு கொள்கை வேறு என்பதில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ராமதாஸின் அறிக்கைகள் அமைந்துள்ளன.
மனக்கசப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் கூட இல்லாத நிலையில் கூட்டணியில் கருத்து வேறுபாடும், கருத்து மோதலும் ஏற்படுவதை தமிழக பாஜக விரும்பவில்லை. இதனிடையே ராமதாஸிடம் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்க தமிழக பாஜகவின் முக்கிய பிரமுகர் ஒருவர் முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வலியுறுத்தல்
பாஜக கூட்டணியில் இருந்தாலும் நமக்கென இருக்கும் தனித்துவத்தை இழக்கக் கூடாது என்பது ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் எண்ணமாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து காட்டமான அறிக்கைகள் வெளிவரத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மக்கள் பிரச்சனைகளில் தாங்கள் எந்த சமரசத்திற்கும் இடம் அளிக்காதவர்கள் என்பதை உணர்த்த முடியும் என அவர்கள் நினைப்பது குறிப்பிடத்தக்கது.