மரங்கள் ஆணையம் அமைக்க வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: மரங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அரசுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில்,
தமிழகத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கவும், மரங்களை பாதுகாக்கவும் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்தச் சட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாக மரங்கள் ஆணையத்தை அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
தமிழகத்தின் எந்தப் பகுதியில் மரத்தை வெட்ட வேண்டும் என்றாலும், மரங்கள் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெறும் முறையை கொண்டுவர வேண்டும் என்றும், மரங்கள் ஆணையம் தரப்பில் கள ஆய்வு செய்து, தவிர்க்க முடியாத காரணமாக இருந்தால் மட்டுமே அது அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவ்வாறு வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக புதிய மரக்கன்றுகள் எந்தெந்த பகுதியில் நட வேண்டும் என ஆணை பிறப்பிக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார்.
மரங்கள் ஆணையம் அமைப்பதன் மூலம் மரங்கள் பாதுகாக்கப்படுவதுடன், தமிழகத்தில் பசுமைப்பரப்பு விரிவடையும் எனத் தெரிவித்துள்ள ராமதாஸ், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விவகாரத்தில் மரங்கள் ஆணையம் கவசமாக திகழக்கூடும் எனக் கூறியிருக்கிறார். மரங்கள் மற்றும் சுற்றுச்சுழலை பாதுகாக்க தனது கோரிக்கையை ஏற்று அரசு மரங்கள் ஆணையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.