கொரோனா சிகிச்சை விவகாரம்... தமிழக அரசுக்கு ராமதாஸ் முன்வைக்கும் முக்கிய யோசனை
சென்னை: கொரோனா மையத்தை தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 5 நாட்களில் குணப்படுத்துவதாக தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவ முறைகள் தடுமாற்றம் கண்டு வரும் நிலையில் அரசுக்கு இந்த யோசனையை தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
சென்னையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு 2 வாரங்கள் தொடர்ந்தால் கொரோனாவை ஒழித்துவிடலாம்- டாக்டர் ராமதாஸ்
சித்த மருத்துவம்
கொரோனா சிகிச்சை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள தனது ட்வீட்டர் பதிவில், ''கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 5 நாட்களில் குணப்படுத்துவதாக தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மீனாகுமாரி கூறியிருக்கிறார். 500 படுக்கைகள் கொண்ட கொரோனா மையத்தை அவர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து மருத்துவம் அளிக்க அனுமதிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.
முக்கியத்துவம்
பாமக நிறுவனர் ராமதாஸ் முன் வைத்துள்ள இந்த யோசனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகளவில் ஆங்கில மருத்துவ முறைகளில் கொரோனாவுக்கு மருந்து இல்லை என்ற சூழலில் அவர் இந்த வேண்டுகோளை அரசுக்கு வைத்திருக்கிறார். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய, மூலிகை தேநீர், கபசுரக் குடிநீர் போன்ற சித்த மருத்துவ முறைகளை அரசே மக்களுக்கு அறிவுறுத்தி வரும் நிலையில் ராமதாஸ் தெரிவித்துள்ள இந்த யோசனையை புறந்தள்ளிவிட முடியாது.
தாம்பரத்தில்
சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமானது சித்த மருத்துவம் தொடர்பாக அதிகப்படியான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. 3 வகையான சித்த மருந்து கலவைகள் மூலம் இந்நிறுவனம் தயாரித்துள்ள மருந்தை கொரோனா தடுப்பு மருந்தாகவும், குணமடையச் செய்யும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இதைச் சுட்டிக்காட்டி அன்புமணி ராமதாஸ் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கிடைக்கும் வாய்ப்பு
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதனை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் கிடைக்கும் வாய்ப்புகளை உதாசீனப்படுத்தாமல் அதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் ராமதாஸ் முன் வைத்துள்ள யோசனையையும் பரிசீலித்து தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் முதற்கட்டமாக 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டை ஒப்படைத்து சிகிச்சை தர அரசு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.