பாமகவுக்கு அந்நிய அறிவு தேவையில்லை... திமுகவை சூசகமாக சாடிய ராமதாஸ்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கு அந்நிய அறிவு தேவையும் இல்லை, தேடலும் இல்லை என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலை பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து எதிர்கொள்ள உள்ள தகவலை ஸ்டாலின் நேற்று வெளியிட்ட நிலையில், அவரை கிண்டல் செய்யும் வகையில் ராமதாஸ் ட்வீட்டரில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். எந்த தேர்தலாக இருந்தாலும் பாமக வெற்றியை தலைமையின் வழிகாட்டுதலும், தொண்டர்களின் உண்மையான உழைப்பும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக கூறியுள்ளார். மேலும், மக்களிடம் செல்வோம், அவர்களுக்காக உழைப்போம், அவர்களால் வெற்றிபெறுவோம் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிடங்களை தான் காற்று நிரப்பும் என திமுகவுக்காக களப்பணியில் இறங்கவுள்ள பிரஷாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனத்தையும் மறைமுகமாக சாடியுள்ளார். பட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை அறிவார்ந்த இளைஞர்களும், உண்மையான தொண்டர்களும் நிறைந்த கட்சி என்றும், இயக்கத்துடன் இரண்டறக் கலந்த இளைஞர்கள் இருக்கும் நிலையில், அந்நிய அறிவுக்கு தேவையும் இல்லை; தேடலும் இல்லை என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இது நேரடியாக கூறாவிட்டாலும், திமுகவை விமர்சித்து மறைமுகமாக அவர் கூறியுள்ள கருத்தாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரும் தேமுதிக... கூட்டணி பற்றி அந்த நேரத்தில் முடிவு
அண்மைக்காலமாக திமுக அதிமுக மோதலை காட்டிலும் திமுக பாமக மோதல் தான் அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே தான் கருத்து யுத்தங்கள் நடக்கின்றன. முரசொலி விவகாரத்தில் குடுமிப்பிடி சண்டை நடக்காத குறையாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. முரசொலி விவகாரத்தில் சில நாட்கள் அமைதியாக இருந்த பாமக மீண்டும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திமுகவை சீண்டியது. இந்நிலையில் மீண்டும் திமுகவை சூசகமாக விமர்சித்து ராமதாஸ் போட்டுள்ள ட்வீட் அறிவாலய தரப்பை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது. திமுக-பாமக இடையேயான அரசியல் மோதலை அமைதியாக ரசித்து வருகிறது அதிமுக.