என்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை.. முத்துவிழா நிகழ்ச்சியில் ராமதாஸ் உருக்கம்
சென்னை: தனது கொள்கைகளில் என்ன குறை உள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தனது முத்துவிழா நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனைக் கேட்டார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் 80-வயதை எட்டியுள்ளதால் அவருக்கு பாமக நிர்வாகிகள் முத்துவிழா நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தருமபுரியில் முத்துவிழா பொதுக்கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், சென்னையில் நேற்று தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் அவருக்கு முத்துவிழா நடைபெற்றது.
அதில் பேசிய ராமதாஸ் சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். அரசியலில் பல்வேறு படிகளை கடந்து வந்துள்ள தாம், இதுவரை எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை எனத் தெரிவித்தார். பாமகவின் கனவை நான் சொல்லி புரியவைக்கத் தேவையில்லை, தமிழ்ச் சமூகம் என் பின்னால் வர மறுப்பதற்கு என்ன காரணம் என எனக்கு புலப்படவில்லை எனக் கூறினார்.
விபரீத முடிவு எடுக்க வேண்டாம்; பாஜகவுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அட்வைஸ்
எனது கொள்கைகளில் என்ன குறை இருக்கிறது என மேடை அமைத்தாவது கூறுங்கள் என பல முறை தெரிவித்துவிட்டேன், என் மீது தவறுகள் இருந்தாலோ அல்லது கொள்கைகளில் குறைகள் இருந்தாலோ திருத்திக்கொள்வதாகவும் கூறிவிட்டேன், ஆனால் இதுவரை யாரும் அப்படி எதுவும் கூறவில்லை என உருக்கமாக பேசினார்.
தனது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் எந்தப் பதவியையும் தேடிச்செல்லாமல் எளியவனாக மட்டுமே இருந்து வருவதாக தெரிவித்தார். தமிழ்ச்சமூகத்துக்காக பாடுபடும் தன்னை பாராட்ட யாருக்கும் மனமில்லை என்றும், இருப்பினும் பரவாயில்லை காலம் வரும் போது தன்னை பற்றி அறிந்துகொள்ளும் நேரம் வரும் எனவும் தெரிவித்தார்.