பெண்ணின் அன்பை இலக்காக கொள்ளாமல்... சொத்துக்களை இலக்காக கொண்டு காதல் - ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
சென்னை: பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் மத்திய அரசின் பரிசீலனைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காதல் என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள முடியாத வயதிலேயே பதின்வயது பெண் குழந்தைகள் காதலில் விழுவதும், அவர்கள் சார்ந்த உடமைகளுக்காக வீழ்த்தப்படுவதும் அதிக அளவில் நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்டுவது சமூகச் சீரழிவுகள் சார்ந்த சிக்கல்களை தடுப்பதற்கு அவசியமானது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாஜ அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கிரிக்கெட்டில்தானே ஓய்வு.. 2024-இல் லோக்சபா தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்.. சுப்பிரமணியன் சுவாமி
வரவேற்கிறேன்
பெண்களின் திருமண வயது 21-ஆக உயர்த்தப் பட்டால், அது நுண்ணூட்டச்சத்துக் குறைவை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை. அந்த வகையில் மத்திய அரசின் திட்டம் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும்.உடல்நலம் மற்றும் நுண்ணூட்டச்சத்து சார்ந்த பிரச்சினைகள் மட்டுமின்றி, சமூகச் சீரழிவுகள் சார்ந்த சிக்கல்களை தடுப்பதற்கும் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டியது அவசியமாகும்.
சொத்து தான் இலக்கு
பதின்வயதில் உள்ள பெண் குழந்தைகள் காதல் என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள முடியாத வயதிலேயே காதலில் விழுவதும், அவர்கள் சார்ந்த உடமைகளுக்காக வீழ்த்தப்படுவதும் அதிக அளவில் நடக்கின்றன. பெரும்பான்மையான காதல்கள் பெண்ணின் அன்பை இலக்காகக் கொள்ளாமல், பெண் சார்ந்த குடும்பத்தின் சொத்துகளை இலக்காகக் கொண்டே அரங்கேற்றப்படுகின்றன.
தடுக்க வேண்டும்
இத்தகைய பக்குவமற்ற காதலின் விளைவாக நடைபெறும் திருமணங்களில் பெரும்பாலானவை ஒரு சில ஆண்டுகளிலேயே தோல்வியடைகின்றன. அதனால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டுமின்றி, அந்த பெண்ணின் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொள்ளும் சோகங்களும் அதிகமாக நடக்கின்றன. அவை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஹார்மோன் கோளாறு
இதற்கான ஒரே தீர்வு பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது தான் என்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் பக்தவச்சலா, கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய அமர்வு, 12.05.2011 அன்று அளித்தத் தீர்ப்பில் உறுதியாக பரிந்துரைத்துள்ளது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டு, அந்த முடிவுக்காக பின்னர் தான் வருத்தப்படுகின்றனர். இதைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்'' என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பக்குவமற்ற வயது
இந்தியப் பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆனால், அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. பக்குவமற்ற வயதில் வரும் காதலும், திருமணமும் தான் பெரும்பான்மையான பெண்களின் சாதனைகளுக்கு தடையாக உள்ளன. பெண்கள் சாதிப்பதற்கு வறுமையை விட பெரும் சுமையாக இருப்பவை இந்த இரண்டும் தான். அந்தத் தடைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
ராமதாஸ் கோரிக்கை
பெண்கள் கல்வியிலும், பிற துறைகளிலும் சாதனை படைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக வல்லுனர் குழுவின் அறிக்கையைப் பெற்று பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பாமக நிறுவன ராமதாஸ் இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.