ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக அநீதி... ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம்... ராமதாஸ் விளாசல்
சென்னை: அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதில் மீண்டும் ஒருமுறை இட ஒதுக்கீடு விதிகள் மீறப்பட்டுள்ளதாக பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் சமூக நீதிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் துரோகம் செய்துள்ளதாகவும், அது கண்டிக்கத்தக்கது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு விவகாரம்... நாணமின்றி நாடகம் நடத்துகிறது தமிழக அரசு... மு.க.ஸ்டாலின் விமர்சனம்
புகார்
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27,28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிறுக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.
இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றியிருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 131 பேருக்கு ஆசிரியர் பணி கிடைத்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அதனை பின்பற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் தவறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தவறு
இட ஒதுக்கீடு வழங்குவதில் தவறு நடப்பதை ஆதாரங்களுடன் விளக்கிய பிறகும், இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்யாமல் கடந்த காலங்களில் செய்ததை தாங்களும் செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது பொறுப்பற்ற செயல் என கண்டித்துள்ளார் ராமதாஸ்.
தலையிடுக
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை புரிந்துகொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக இல்லை எனக் கூறியுள்ளார். இதனிடையே முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், இதில் தலையிட்டு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.