பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக பயிலாமலேயே பட்டப்படிப்பு வரை செல்லலாம் என்ற அவல நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வருந்த வேண்டும்
தமிழின் பெருமை, தமிழ் கலாச்சாரத்தின் வளமை, தமிழர் நாகரிகத்தின் பழமை என நாமெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற எளிய இலக்கைக் கூட நம்மால் எட்ட முடியவில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும். இந்த நிலைக்காக அனைவரும் வருந்த வேண்டும்.
தமிழ் கட்டாயம்
தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே பட்டப்படிப்பு வரை படிக்கலாம் என்ற அவல நிலை இப்போது வரை நீடிக்கிறது. இந்த நிலைக்கு முடிவுக்கு கட்ட வேண்டும் என்ற உறுதியுடன், பா.ம.க. தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த 2006-ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு தமிழ் கற்றல் (தமிழ் பாடத்தைக் கட்டாயமாக்குதல்) சட்டம்' நிறைவேற்றப்பட்டது. அச்சட்டப்படி, 2006-07 கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.
விலக்கு
அதன்பின் ஆண்டுக்கு ஒரு வகுப்பு வீதம் நீட்டிக்கப்பட்டு வந்த அச்சட்டம் 2015-16 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தமிழைப் படிக்காமல் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், சில தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சில பள்ளிகளுக்கு விலக்கு அளித்ததால் இன்று வரை 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் என்ற நோக்கம் நிறைவேறவில்லை. அதன்பின் இன்று வரை உயர்நீதிமன்ற தீர்ப்பை மாற்றி தமிழை கட்டாயப்பாடமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது துரதிருஷ்டவசமானது.
ஏமாற்று வேலை
தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு ஆண்டிலும் எந்தெந்த வகுப்புகளுக்கு தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது என்பது குறித்து கல்வித்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். ஒன்பதாவது வகுப்பு வரை தமிழை கட்டாயப்பாடமாக கற்றுக் கொடுத்ததாக அறிக்கை அளித்த பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் தங்களிடம் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தமிழ் கற்றுத்தர இயலவில்லை என்று கூறுவது ஏமாற்று வேலை
வலியுறுத்தல்
இவ்வாறாக மக்களின் உணர்வும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்பாடமாக்க அரசுக்கு தடையாக இருப்பது எதுவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழை நேசிக்காத எந்த கல்வி முறையும் முன்னேற முடியாது. எனவே, உயர்நீதிமன்றத்தை அணுகி பத்தாம் வகுப்பில் தமிழைக் கட்டாயப் பாடமாக படிப்பதில் இருந்து சில பள்ளிகளுக்கு விலக்கு அளிக்கும் தீர்ப்பை ரத்து செய்ய வைக்க வேண்டும்.