சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: நாடு முழுவதும் முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக சீரமைக்கப்படாமலேயே அதிக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது;
உண்மை செலவு
தமிழகத்தில் இதுவரை அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கான செலவு மற்றும் வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணம் குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோரிக்கை
மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக்காக 40% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஆணையிடுமாறு ராமதாஸ் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை ஏற்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
செலவு ரூ.536 கோடி
செங்கல்பட்டை அடுத்த பரனூரிலும், திண்டிவனத்திற்கு முன்பு உள்ள ஆத்தூரிலும் கடந்த 2005-ம் ஆண்டு முதல் சுங்கக் கட்டண சாலையாக அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கடந்த 13 ஆண்டுகள் 6 மாதத்தில் ரூ.1098 கோடி சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டுமே செலவானதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதிர்ச்சி
சாலை அமைக்கப்பட்ட ஆன செலவை விட இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் வெளியிட்ட பதில் தமக்கு அதிர்ச்சி தருவதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.